ETV Bharat / state

தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு! - annamalai election nomination

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 4:32 PM IST

Updated : Mar 28, 2024, 5:17 PM IST

அண்ணாமலை வேட்புமனுவில் தவறுகள் உள்ளதாக அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு
அண்ணாமலை வேட்புமனுவில் தவறுகள் உள்ளதாக அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு

Annamalai election nomination: அண்ணாமலை வேட்புமனுவில் தவறுகள் உள்ளதாக அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது இரண்டு வேட்பு மனுக்களில் ஒன்று ஏற்கப்பட்டது.

தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நேற்று வரை தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் இந்த பரிசீலனை நடைபெற்றது.

இதில் அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் அண்ணாமலையின் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யவில்லை எனவும், நம்பர் 26 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப் பின்னணியை வரிசைப்படுத்தவில்லை எனவும் வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாக குறிப்பிடவில்லை எனவும் பல்வேறு கட்சியினர் குற்றம்சாட்டினர்.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியான கிராந்தி குமார் முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்தனர். அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அறையில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை பிழைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்து, அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன், "பாஜக வேட்பாளர் அண்ணாமலை (வரிசை அண்:17, 21) 2 வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் (17) வேட்புமனுவில் பகுதி 3iஇல் கையெழுத்திவிடவில்லை, அதனால் நிராகரிக்கப்பட்டது. அஃபிடவிட் சொந்த பார்மெட்டில் தயாரித்து போட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் விதியில் தேர்தல் ஆணையத்தில் பரிந்துரைத்த வடிவத்தில் அபிடவிட் இல்லை என்றால் அதை நிராகரிக்கலாம் எனக் கூறியுள்ளது.

இரண்டாது வேட்புமனு பகுதி 5இல், குற்ற வழக்குகள் குறித்த அட்டவணையில் தேர்தல் ஆணைய வழிமுறைப்படி அஃபிடவிட் போடவில்லை. தேர்தல் ஆணையம் பாஜக கைக்கூலி என்பதால், சொந்தமாக வடிவமைத்து போட்டுள்ளனர். அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களின் சிறு சிறு தவறுகளுக்கு படிவம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேட்புமனுவை தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொண்டதாக கூறிவிட்டார். கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக உள்பட மற்ற அனைத்து வேட்பாளர்களும் 5 நபர்களை தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அண்ணாமலையுடன் சுமார் 10 பேர் இருந்தனர். இவை அனைத்து நேரலையிலும் ஒளிப்பரப்பானது.

தேர்தல் ஆணையம் பாஜக, அண்ணாமலைக்கு ஒரு சட்டம், அதிமுகவிற்கு ஒரு சட்டம் வைத்துள்ளதா? திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவர்கள் மீது சந்தேகம் உள்ளது. வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நாங்கள் நீதிமன்றம் செல்லப் போகிறோம். மக்கள் அவர்களை புறக்கணிக்கப் போகிறார்கள், பித்தலாட்டம் செய்து கோவை தமிழ் மண்ணில் வெற்றி பெறலாம் என அண்ணாமலை நினைத்தால், அது நடக்காது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம், மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளோம். கோவை மக்கள் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து திமுக வழக்கறிஞர் அன்புச்செழியன் கூறுகையில், “திமுக வேட்பாளர் ராஜ்குமார் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவில் பல்வேறு குறைகள் இருந்தது. அதனை அனைவரும் சுட்டிக்காட்டினோம். திமுக தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் மனு ஏற்கப்பட்டுள்ளது. மேலும், திமுக வேட்பாளர் ராஜ்குமார் பெயரிலும் பாஜகவினர் 5 மனு தாக்கல் செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி பேசுகையில், "வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அண்ணாமலையின் வேட்புமனுவில் தவறுகள் உள்ளது. குறிப்பாக அவருக்கு எங்கு வாக்கு, எங்கு போட்டி என்ற இடத்தில் வெறும் 20 கோவை என குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களுக்கு கொடுத்த விதிமுறைகள் குறித்த புத்தகத்தில் உள்ள சரத்தை குறிப்பிட்டு, நாங்கள் ஆதாரப்பூர்வமாக காண்பித்தோம், ஆனாலும் தேர்தல் அதிகாரி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சுயேட்சை வேட்பாளர் கையெழுத்திடவில்லை, படிவம் பூர்த்தி செய்யவில்லை என நிராகரித்தார்கள். ஆனால், இவரது மனுவில் நிறைய பிழைகள் உள்ளது.

அண்ணாமலைக்கு திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தேர்தல் விதி அனைவருக்கும் ஒன்றுதான், நாம் தமிழர் வேட்பு மனுவில் குறை இருந்தால் அதை நிராகரித்திருப்பார்கள். நாங்களும் புகார் கடிதம் எழுதி கொடுத்துள்ளோம், அண்ணாமலை வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்" என்றார்.

இதனையடுத்து, இது குறித்து ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர் ராகுல்காந்தி கூறுகையில், "அண்ணாமலை வேட்புமனுவில் உள்ள பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாமல் தாக்கல் செய்துள்ளார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது குறித்து முதலில் நான் தான் கேள்வி எழுப்பினேன். நான் கூறுவதை தேர்தல் அலுவலர் கண்டுகொள்ளவில்லை. அனைவருக்கும் ஒரே விதி தான். படிவம் 26 பிழைக்காக 59 வேட்புமனுவில் குறைந்தது 10 வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்கும், ஆனால் அண்ணாமலை அந்த பார்மெட்டில் கூட வைக்கவில்லை, அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அவரது வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கோரினோம், எதுவும் கேட்கவில்லை. இதனையடுத்து நான் புகார் மனு அளித்துள்ளேன். நேர்மையான வேட்பாளர் என அவர் கூறுகிறார், அதனை அவர் கடைபிடிக்க வேண்டும் என கேட்கிறோம். என் புகார் மீது விளக்கம் கொடுத்த பின் சட்ட ரீதியான நடவடிக்களை எடுப்போம்” என தெரிவித்தனர்.

தொடர்ந்து, பாஜக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஜி.கே.நாகராஜ் கூறுகையில், "அண்ணாமலையின் வேட்பு மனு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏதேனும் பிழைகள் இருந்தால், ரிட்டர்னிங் ஆபிசர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு எதுவுமில்லை, வேண்டுமென்றே அங்கு சில கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் தெரிவித்தோம், உங்கள் பணிகளைச் செய்ய விடாமல் தடுப்பது நியாயமானது அல்ல என்று கூறினோம். திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்றவர்கள் மீது புகார் அளிக்க உள்ளோம்" என தெரிவித்தார். பின்னர் பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், "அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும். அவரும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்று கூறிவிட்டார்.

எதிர்கட்சிகள் கூறுவதை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்கட்சியினருக்கு அண்ணாமலை என்ற பெயரை கேட்டாலே பயம். ஒட்டுமொத்த தமிழ்நாடு வாக்காளர்களும், கோவை வாக்காளர்களும் அண்ணாமலைக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளார்கள். பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அவர் ஜெயிக்கப் போகிறார். அதன் அச்ச உணர்வினால் எதிர்கட்சிகள் இதுபோன்ற சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். சட்டமும், நியாயமும் அண்ணாமலையின் பக்கமும், பாஜக பக்கமும் இருக்கிறது என்பது இந்த இடத்தில் முடிவாகியுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சால்வை அணிவித்த மூதாட்டி..பணம் கொடுக்க முயன்ற அர்ஜுன் சம்பத்? - Arjun Sambath

Last Updated :Mar 28, 2024, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.