ETV Bharat / state

வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தனி ஏ.சி.வார்டு - மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு! - ac ward in madurai govt hospital

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 3:36 PM IST

AC WARD IN MADURAI GOVT HOSPITAL
AC WARD IN MADURAI GOVT HOSPITAL (credits to etv bharat tamil nadu)

Madurai Rajaji Hospital: வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தனியாகச் சிகிச்சை அளிக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு ஏ.சி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம்(மே 4) முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது.

சிறப்பு வார்டில் பணியமர்த்தப்பட்டுள்ள செவிலியர்கள்
சிறப்பு வார்டில் பணியமர்த்தப்பட்டுள்ள செவிலியர்கள் (credits to etv bharat tamil nadu)

வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மதுரை மாநகர் பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியே வெப்பத்தின் அளவு தொடர்ந்து பதிவாகி வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை காரணமாக வெளியில் செல்லும் பொது மக்களுக்கு, உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறி உப்பு சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலை வலி, உடல் சோர்வு, தலைச் சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போது சிலர் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால், அவர்களுக்குப் பக்கவாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவத்துறை அறிவுறுத்தி வருகிறது.

தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மருந்துகள்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மருந்துகள் (credits ' etv bharat tamil nadu)

கத்திரி வெயிலின் தாக்கத்தால் வெப்பம் சார்ந்த நோய்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனையின் நிர்வாகத்தினர் கூறுகையில், "இந்த சிறப்பு வார்டில் ஏசி வசதியுடன் கூடிய 10 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு சுழற்சி முறையில் 10க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வார்டில் வெண்டிலேட்டர் கருவிகளும், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தனி வார்டுகளில் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் ஆகியவை வழங்கப்படுகிறது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.