ETV Bharat / bharat

2ஜி வழக்கு தீர்ப்பு குறித்த மத்திய அரசின் புதிய மனு.. பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு! - SUPREME COURT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 10:19 AM IST

Supreme Court
2G Case

2G Case Verdict: கடந்த 2012ஆம் ஆண்டு 2ஜி முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி: 2ஜி முறைகேடு வழக்கில், கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றைகளை ஒதுக்க வேண்டும் எனவும் மற்றும் 2008ஆம் ஆண்டு ஆ.ராசா, தொலைத்தொடர்பு துறை மத்திய அமைச்சராக இருந்தபோது, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றை விற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அப்போது வழங்கிய உத்தரவில் திருத்தம் செய்யல் கோரியும், சட்டத்தின் அடிப்படையில் நிர்வாக நடைமுறைகள் மூலம் அலைக்கற்றைகளை ஒதுக்க அனுமதிக்கவேண்டும் என்றும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதுமட்டும் அல்லாது அந்த மனுவில், "அலைக்கற்றை பயன்பாடு என்பது வணிக நோக்கில் மட்டுமல்லாமல், தேசப்பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட அம்சங்களுக்கும் தேவைப்படுகிறது" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு 2ஜி முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை, உச்சநீதிமன்ற விதிகள் 2013ன் ஆணை XV விதி 5 இன் கீழ், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து உச்சநீதிமன்ற பதிவாளரின் உத்தரவில், "மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கோரப்பட்டுள்ள பிரார்த்தனையை ஆராய்ந்ததில், விண்ணப்பதாரர் தற்போதைய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்கிறோம் என்ற போர்வையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார் என்பது தெளிவாகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி உட்பட 16 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “நீட் ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிந்திருக்க அனுமதி வழங்கியிருக்க வேண்டும்” - உயர் நீதிமன்றக்கிளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.