ETV Bharat / bharat

கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவிலும் ஹூக்கா பார்லர்களுக்கு தடை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 12:46 PM IST

கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தெலங்கானாவிலும் ஹூக்கா பார்கள் இயங்க தடை
கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தெலங்கானாவிலும் ஹூக்கா பார்கள் இயங்க தடை

Telangana Hookah parlors ban: தெலங்கானா சட்டப்பேரவையில் இன்று (பிப்.12) சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, மாநிலத்தில் ஹூக்கா பார்லர் இயங்க தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையில் இன்று (பிப்.12) தெலங்கானா மாநிலத்தில் ஹூக்கா பார்லர் இயங்க தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. கண்ணாடி குவளைக்குள் போதைப் பொருள் வைக்கப்பட்டிருக்கும். அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீளமான உறிஞ்சு குழாயை உறிஞ்சினால், ஒரு விதமான போதை ஏற்படும். இதுவே ஹூக்கா எனப்படுகிறது.

ஹூக்கா என்ற போதைப்பொருளை பயன்படுத்துவதால் மூளை, நுறையீரல், இதயம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட தெலங்கானா அரசு, ஹூக்கா பார்லர் இயங்க தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது. இன்று சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சார்பில், சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் டி.ஸ்ரீதர் பாபு, சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதாவின் நோக்கங்களை விளக்கினார்.

அதில் அவர், “ஹூக்கா இளம் தலைமுறையினருக்கு அதிக தீங்குகளை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஹூக்கா பார்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். குறிப்பாக கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் ஹூக்காவுக்கு வெகுவாக அடிமையாகி வருகின்றனர். ஹூக்கா புகைப்பது சிகரெட் புகைப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும். சுமார் 200 பஃப்ஸ் கொண்ட ஒரு மணி நேர ஹூக்கா, சிகரெட்டை விட 100 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கும்.

ஹூக்காவில் கரி பயன்படுத்தப்படுவதால் புகையில், கார்பன் மோனாக்சைடு, கன உலோகங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் இருக்கும். இது ஹூக்கா பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமட்டுமில்லாமல், மற்றவர்களுக்கும் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும். ஹூக்கா பார்கள் பொது இடங்களில் சுகாதார கேடுகளையும் ஏற்படுத்தும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டம் 2003 திருத்த மசோதா எந்த விவாதமும் இல்லாமல், குரல் வாக்கெடுப்புடன், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கர்நாடகாவில் கடந்த பிப்.9 ஆம் தேதி முதல் பொது இடங்களில் ஹூக்கா புகைக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் உள்ள ஹூக்கா பார்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பஞ்சு மிட்டாயில் கேன்சரை உருவாக்கும் ரசாயனம்.. புதுச்சேரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.