தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை - நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 8:35 AM IST

Anti corruption: மோட்டார் வாகன ஆய்வாளரிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Anti corruption
லஞ்ச ஒழிப்பு

வேலூர்: காட்பாடி அருகே தமிழ்நாடு - ஆந்திரா எல்லை பகுதியில், கிறிஸ்டியன் பேட்டை போக்குவரத்து சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், வசந்தி (50). இவர் சோதனைச் சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு லஞ்சம் பெறுவதாக துணை ஆய்வு குழு அலுவலர் சரவண முத்து என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து திடீர் சோதனை செய்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறைக் காவலர்களை கண்டவுடன், வசந்தி தனது காரில் ஏறி அவசரமாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வசந்தி சென்ற காரை பின் தொடர்ந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், சிப்காட் பாரதி நகர் பகுதி அருகே மடக்கி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி, காரில் வைத்திருந்த சுமார் ரூ.3 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதனையடுத்து பாரதி நகர் பகுதியில் உள்ள வசந்தியின் வீட்டில், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர், ஆய்வாளர் விஜய் தலைமையிலான காவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் சோதனை நடைபெற்றுள்ளது. வீட்டில் நடந்த அந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்ததாகவும், மொத்தமாக 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சோதனைச் சாவடியில் கடக்கும் வாகனங்களிடமிருந்து பணம் பெறப்பட்டு வருவதாகவும், பின்னர் வேலைக்கான நேரம் முடிந்து வீடு திரும்பும் பொழுது, வசந்தி சில நபர்கள் மூலம் பணத்தைப் பெற்று செல்வதாகவும், மேலும் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் முறையாக ஆய்வாளரை கவனிக்க மறுத்தால், வாகனங்களை அனுமதிக்காமல் நிறுத்தி வசூலில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.

தற்போது இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் இருந்து 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, மேலும் அவரது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் ஆணவக்கொலை.. இளம்பெண்ணின் பெற்றோர் சிறையில் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details