ETV Bharat / state

சங்கன்விடுதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விவகாரம்; மூன்று பேரிடம் சிபிசிஐடி விசாரணை! - sangam viduthi issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 7:24 PM IST

SangamViduthi water tank issue: புதுக்கோட்டை குடுவாண்டான் தெரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கடந்த மாதம் 25ஆம் தேதி கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் மாதிரியைச் சேகரித்த ஊரக வளர்ச்சித் துறை, அதனை திருச்சியில் உள்ள குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பினர்.

அதில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் உருவான பாசி தான் பச்சை நிறத்தில் படர்ந்திருக்கலாம் என கூறப்பட்டது. மேலும், பரிசோதனையின் முடிவுகளில் அந்த குடிநீரில் மாட்டுச்சாணம் உள்ளிட்ட எந்தவித கிருமிகளும் கலக்கப்படவில்லை எனவும், அந்த நீர் குடிக்க உகந்த நீர் எனவும், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இருந்த போதிலும், இந்த விவகாரத்தில் காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும், ஒரு தலைபட்சமாக விசாரித்துள்ளனர் என்றும், இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியும், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து ஜூன் 4-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த புதன்கிழமையான மே 15ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கிராம மக்களிடம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சண்முகம் என்பவருக்கு அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், அவர் புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

இதேபோன்று, குருவாண்டன்தெரு பகுதியைச் சேர்ந்த 2 பேர் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் இந்த வழக்கை விசாரணை செய்யும் விசாரணை அதிகாரி சிபிசிஐடி டிஎஸ்பி சதீஷ்குமார் விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.