தமிழ்நாடு

tamil nadu

10-ஆம் வகுப்பில் 495 மதிப்பெண்.. வறுமையின் பிடியில் தவிக்கும் குடும்பம்.. உதவிக்கரம் நீட்டுமா அரசு?

By

Published : May 31, 2023, 12:54 PM IST

Updated : May 31, 2023, 4:05 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் எடுத்தும், தனது உயர் கல்வியை தொடர முடியாத நிலையில் மிகவும் வறுமையாக வசித்து வருவதை விரிவாக ஆராய்ந்துள்ளது, இந்த செய்தித் தொகுப்பு.

Etv Bharatவறுமையின் கோரப்பிடியில் தவிக்கும் பட்டதாரி குடும்பம்.. உதவிக்கரம் நீட்டுமா அரசு?
வறுமையின் கோரப்பிடியில் தவிக்கும் பட்டதாரி குடும்பம்.. உதவிக்கரம் நீட்டுமா அரசு?

தாயார் பண்டார செல்வி மற்றும் மகன் அர்ஜுன் பிரபாகரன் அளித்த பிரத்யேக பேட்டி

திருநெல்வேலி: சரி வர வேலைக்குச் செல்லாமல், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி நோயால் அவதி உற்று உயிரிழந்தார், கணவர் மாணிக்கவாசகம். மனைவி பண்டார செல்விக்கு மஞ்சள் காமாலை உள்பட பல்வேறு உடல் கோளாறுகள். அருகில் இருக்கும் பள்ளியில் ஒரேயொரு சீருடையை மட்டும் வைத்துக் கொண்டு 10ஆம் வகுப்பு படித்த மகனும், ஒரு மகளும் இந்த தம்பதிக்கு உள்ளனர்.

ரேஷன் அரிசி சாப்பாடு, தனது அம்மா தங்கி இருந்த பாழடைந்த பழைய வீடு, வீட்டின் ஒரு அறையில் எரியும் ஒற்றை மின் விளக்கு என வாழ்கிறது மூவர் கொண்ட குடும்பம். இந்த வீடும், அவரது உறவினர்களால் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படும் நிலை. இருப்பினும், மகன் 8ஆம் வகுப்பு பயிலும்போது தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றதால் மாதந்தோறும் கிடைக்கும் ஆயிரம் ரூபாய், தாய் பண்டார செல்விக்கு மாதம் ஆயிரம் ஆதரவற்றோர் உதவித்தொகை என மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் என்பது குடும்ப வருமானம்.

ஆனாலும், கேஸ் சிலிண்டர் விலை இறக்கு கூலியோடு சேர்த்து ஆயிரத்து 200 ரூபாய் ஆகிவிட்டதே. எனினும், வறுமையின் பிடியில் வாடித் தவித்த மகனுக்கு கல்விச் செல்வம் மட்டும் கொட்டிக் கிடைத்தது. இதனை அள்ளிப் பருக அவரது பள்ளி ஆசிரியர்கள் முன் வர, ஒரு வழியாக 10ஆம் வகுப்பை முடித்தான்.

அதிலும், 495 என்ற மாவட்ட அளவிலான முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்றார். ஆனால், வறுமை தவிக்க விட, கல்வி பசியைத் தூண்டியது. இதற்கும் அவரது பள்ளி ஆசிரியர்கள் முன்னேறி வர, குடும்பம் ஒரு வறுமையின் கோரப்பிடியில் தவித்து வருகிறது. இவை அனைத்தும் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தின் 2ஆம் பாகத்தின் கதை அல்ல. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருக்கும் உண்மையான நிகழ்கால நிகழ்வே.

மட்டன் கடைசியா சாப்பிட்டது எப்போ தெரியுமா? நெல்லை மாவட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை தொடர்கிறார், மாணவன் அர்ஜுன பிரபாகரன். இப்படியான நிலையில் வாழ்ந்து வரும் தாய் பண்டார செல்வி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “நாங்கள் கடும் வறுமையில் இருந்து வருகிறோம்.

தேசிய திறனாய்வுத் தேர்வில் எனது மகன் முதல் இடம் பிடித்து, அதன் மூலம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் குடும்பச் செலவுக்கு உதவியாக இருக்கிறது. இருப்பினும், வாழ்வாதாரம் இல்லாததால் வறுமையில் இருந்து மீள முடியவில்லை. எனக்கு உடல் நலம் சரியில்லாததால், மாற்றுத் துணி கூட இல்லாமல் அர்ஜுன பிரபாகரன் தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறான்.

வருமானம் இல்லாததால் கிடைக்கும் சாப்பாட்டை வைத்து பசியை போக்கி வருகிறோம். ஒரு நாள் சமைக்கும் குழம்பை மூன்று நாட்கள் வைத்து சமாளிப்போம். வாரத்தில் ஒருமுறை மட்டுமே காய்கறி வாங்குவேன். நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக அர்ஜுன பிரபாகரன் 1ஆம் வகுப்பு படிக்கும்போது அவனுடைய அப்பா மட்டன் எடுத்து கொடுத்தார்.

அதன் பிறகு தற்போது வரை நான் என் குழந்தைகளுக்கு மட்டன் எடுத்துக் கொடுத்ததில்லை. அதற்கு என்னிடம் பணம் இல்லை. குழந்தைகளும் அதை எதிர்பார்க்க மாட்டார்கள். எனது கணவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இறந்து விட்டார். அவர் இருக்கும்போது தினமும் வெறும் 20 ரூபாய் மட்டும் குடும்பச் செலவுக்கு தருவார்.

அப்போதும் வறுமையில் அதை சமாளித்தேன். தற்போது 10ஆம் வகுப்பில் எனது மகன் முதல் மதிப்பெண் எடுத்துள்ளான். தொடர்ந்து அவன் உயர் கல்வி பெற பணம் தேவைப்படுகிறது. எனவே, அரசு எனக்கு வேலை வழங்கினால், அதன் மூலம் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்வேன்.

பள்ளிப் பருவத்தை அனுபவிக்க முடியவில்லை:என் மகனின் கனவையும் பூர்த்தி செய்வேன். நான் பிஏ பட்டப்படிப்பு முடித்துள்ளேன். தற்போது சொந்த வீடு இல்லாமல் இருக்கிறோம். எனவே எங்களுக்கு இருப்பதற்கு ஒரு வீட்டையும் அரசு கட்டித் தர வேண்டும்” என்றார். மேலும், இது குறித்து மாணவன் அர்ஜுன பிரபாகரன் கூறுகையில், “என்னுடைய அப்பா இறந்து விட்டார். வீட்டில் ரொம்ப கஷ்டம்.

அந்த கஷ்டத்தோடுதான் நான் படிக்கிறேன். என்னிடம் ஒரே ஒரு சீருடைதான் இருக்கிறது. அதை தினமும் துவைத்து போடுவேன். உயர் கல்வி பயின்று மருத்துவர் அல்லது பொறியாளராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அரசு உதவி செய்ய வேண்டும்.

பிற மாணவர்களைப்போல் நேரம் கிடைக்கும்போது வெளியே எங்காவது செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால், கையில் பணம் இல்லாததால் எங்கும் செல்ல மாட்டேன். குறிப்பாக படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும்போது பணம் இல்லாமல் பலமுறை கஷ்டப்பட்டுள்ளேன். எனவே, அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

மருத்துவர் அல்லது பொறியாளராக ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்ட மாணவனின் ஏழ்மை நிலைமையை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பண்டார செல்விக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.

இதன் பேரில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பண்டார செல்விக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அதில் வீடு கட்ட பணம் இல்லாததால், அதில் வீடு கட்ட அரசு உதவி செய்ய வேண்டும் என பண்டார செல்வி கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:முட்டை, மாத்திரையில் அசத்தல் ஓவியம்.. கல்விக்காக ஏங்கும் ஊத்துமலை மாணவி.. அரசு உதவி செய்யக் கோரிக்கை!

Last Updated :May 31, 2023, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details