தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் அகில இந்திய அளவில் நடந்த ஹாக்கி போட்டி; நியூடெல்லி அணி அபார வெற்றி!

By

Published : May 29, 2023, 1:34 PM IST

Etv Bharat

அகில இந்திய அளவில் தூத்துக்குடியில் நடந்த 12வது ஹாக்கி போட்டியில் நியூடெல்லி அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

நியூடெல்லி அணி அபார வெற்றி!

தூத்துக்குடி:12வது அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூடெல்லி ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையும், கோப்பையும் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 18ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

இந்த போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்ட நிலையில், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், காலியிறுதி, அரையிறுதி போட்டிகளும் நடைபெற்றன. இறுதி போட்டிக்கு நியூடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரபாத், சௌத் சென்ட்ரல் ரயில்வே அணியும் தகுதி பெற்றன.

இறுதி போட்டியை கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியை, இந்திய தேசிய பீல்ட் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும் அர்ஜுனா விருது (Arjuna Award) பெற்றவருமான முகமது ரியாஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவங்கி வைத்தனர்.

இதில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரபாத், சௌத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. போட்டி தொடங்கிய 15வது நிமிடத்தில் நியூடெல்லி அணி தனது முதல் கோலை அடித்தது. 18வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி பதில் கோல் அடித்தது. இதையெடுத்து நியூடெல்லி அணி வீரர்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆடி ஆட்டத்தின் 29, 48வது நிமிடத்தில் கோல்கள் அடித்தனர். இறுதியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

முன்னதாக 3, 4 இடங்களுக்கான போட்டியில் நியூடெல்லி - பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், நியூடெல்லி காம்ப்ட்ரோலர் - ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணிகளும் மோதின. இதில் ஷீட் அவுட் முறையில் 5 - 4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது. இவ்விழாவில், முன்னாள் செய்தி அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு முதலிடம் பெற்ற நியூடெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணிக்கு, 'லட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஹாக்கி கோப்பை' மற்றும் ரூபாய் 1,00,000-க்கான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற செகந்திரபாத், சௌத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு ரூபாய் 75,000- ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெற்ற நியூடெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணிக்கு ரூபாய் 50,000-க்கான ரொக்கப் பரிசு, நான்காமிடம் பெற்ற நியூடெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணிக்கு ரூபாய் 30,000-க்கான ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கபட்டன.

மேலும் காலிறுதிப் போட்டியில் விளையாடிய கோவில்பட்டி - ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணி, சென்னை - இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணி, பெங்களூரு - கனரா பேங்க் அணி, சென்னை - ஜிஎஸ்டி மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் அணி ஆகிய அணிகளுக்கு ஆறுதல் ரொக்கப் பரிசாக தலா ரூபாய் 20,000 வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் வீடு செல்லப்போவது இல்லை - பஜ்ரங் புனியா சூளுரை!

ABOUT THE AUTHOR

...view details