ETV Bharat / state

அடுத்த 3 நாட்களுக்கு வடதமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Heat wave in Tamil Nadu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 4:22 PM IST

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்

Heat wave in Tamil Nadu: நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் 5 சென்டிமீட்டர் மழையும், கோழிப்போர்விளை, சுருளக்கோடு பகுதிகள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதே போல கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, முள்ளங்கினாவிளை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தலா 2 சென்டிமீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு-I, சிவலோகம், திற்பரப்பு, களியல், பெருஞ்சாணி அணை, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, மதுரை மாவட்டம் விரகனூர் அணை ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
அதிகபட்ச வெப்பநிலையாக தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் என மிக அதிகமாக இருந்தது. ஏனைய தமிழக சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 42.0 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 40.5 டிகிரி செல்சியஸ், திருச்சி விமான நிலையத்தில் 40.3 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.1 டிகிரி செல்சியஸ், மதுரை நகர் பகுதி மற்றும் தஞ்சாவூரில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23 டிகிரி – 31 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்நிலையில் ஏப்.30 ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே.01 முதல் மே.03 வரையான தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே.04 முதல் மே.06 வரையான தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை: ஏப்.30 முதல் மே.04 வரையான அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

ஏப்.30 முதல் மே.04 வரையான அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 3 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

மே.01 முதல் மே.03 வரையான தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 டிகிரி - 5 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

ஏப்.30 முதல் மே.04 வரையான அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலையாக, வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி – 43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி – 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: ஏப்.30 முதல் மே.04 வரையான தேதிகளில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: மே.01 முதல் மே.03 வரையான தேதிகளில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க: உச்சபட்ச வெப்பநிலை தாக்கத்தில் இருந்து வனவிலங்குகளைக் காப்பாற்றுவது எப்படி? சூழலியல் ஆர்வலர் கூறுவது என்ன? - Animals Affected By Heat

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.