தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை பணிகள் துவங்கியதாக தமிழக அரசு தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 5:54 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம்

Thoothukudi Sterlite gun firing case update: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 2018ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது காவல் துறையினர் மே 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த V.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி.யாக இருந்த P.மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் துறையைச் சேர்ந்த 17 பேர், வருவாய் துறையைச் சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விளக்கமளிக்க, சிபிஐ தரப்பு வழக்கறிஞரும், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் அடுத்த விசாரணையின்போது ஆஜராகச் சொல்வதாகத் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டார்கள் என்பதும் தெரியவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்று இருந்த காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் பிரச்சனை ஏற்பட்டபோது திறமையாகக் கையாண்டு நீதிமன்றம் சுமுகமாகச் செயல்படச் செய்தவர் என்று தெரிவித்து, அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுக்குள் ஆளானார் என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது நடவடிக்கை உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:திருச்செந்தூர் சூரசம்ஹாரம்; நிகழ்ச்சி நிரல் என்ன? கட்டுப்பாடுகள் என்னென்ன? சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details