ETV Bharat / state

தமிழகத்தில் கல்வி 'கலைஞர்' மயமாக்கப்பட்டு வருகிறது - தமிழிசை சௌந்தரராஜன் சாடல்! - TAMILISAI SOUNDARARAJAN BJP

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 12:05 PM IST

Karunanidhi lesson In School Books: ஏதோவொரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி 'கலைஞர்' மயமாக்கப்பட்டு வருகிறது என் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan Press Meet
தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு (Video Credit - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியபோது, "வந்தே பாரத் ரயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி. மேலும், விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது.

தற்போது காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும், திமுகவும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை; ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள். இதுதான் திமுகவின் சாதனை. திமுகவும், காங்கிரசும் கூட்டணியில் இருந்து கொண்டு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. எனவே, தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றமே, கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே, திமுகவினருக்கும் சிறை துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிக அளவில் தொடர்பு உள்ளது.

கஞ்சா விற்பனையை பொருத்தவரையில், காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் எந்த அளவில் தொடர்பு உள்ளது என்பதை கண்காணிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை பொருள்தான் காரணம்.

எனவே, போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றம் சொன்னதைப் போலவே
கஞ்சா பொருட்கள் விற்பனை தொடர்பாக, சிறை துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

கலைஞர் மயம்: மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால், அதற்கான இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். கருணாநிதி பற்றிய தகவல்கள் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. தற்போது 8 ஆம் வகுப்பு புத்தகத்திலும் அவரை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி 'கலைஞர்' மயமாக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள்?

எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். தலைவர்களைப் பற்றி தகவல்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெறுவது குறித்து வழிகாட்டுமுறை இருக்க வேண்டும் குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் எத்தனை முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள்? ஆனால், இளங்கோவன் சொல்கிறார், இந்த ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று!. திமுக ஆட்சியை காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லிவிட்டார். அவர் இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது" என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

இதையும் படிங்க: ரூ.1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் கடத்தல்; ஐடி ஊழியரை மடக்கிப் பிடித்த மடிப்பாக்கம் போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.