தமிழ்நாடு

tamil nadu

Honour Killing:நெல்லையில் ஆணவ கொலை? வேற்று சமூகப் பெண்ணை காதலித்த இளைஞர் சடலமாக மீட்பு

By

Published : Jul 24, 2023, 4:21 PM IST

Updated : Jul 24, 2023, 7:11 PM IST

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை ஊராட்சியில் வேற்று சமூக பெண்ணை காதலித்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

வேற்று சமூகப் பெண்ணை காதலித்த இளைஞர் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

திருநெல்வேலி: திசையன்விளை அருகே அப்புவிளை ஊராட்சியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் காதல் விவகாரத்தில் பெண் வீட்டாரால் ஆணவப் படுகொலை (Honour Killing in Tirunelveli) செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காதலித்து வந்ததாக கூறப்படும் பெண்ணும், கொலை செய்யப்பட்ட இளைஞரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முத்தையா என்பவர், சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவர் கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வரும் இட்டமொழி ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதாலும் குறிப்பாக இளைஞர் முத்தையா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலும் பெண்ணின் வீட்டில், இந்த காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

எதிர்ப்பையும் மீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை கம்பெனி விடுமுறை நாளன்று(ஜூலை 23) மதியம் அப்புவிளை சுவாமிதாஸ் நகரில் உள்ள முத்தையாவின் வீட்டிற்குச் சென்று அவரை இளம்பெண் நேரில் சந்தித்துள்ளார். பின்னர், மாலையில் முத்தையா தனது இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணை இட்டமொழியில் கொண்டு விட்டுவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதன் பின்னர், இரவு 8 மணி அளவில் செல்போனில் பேசிக் கொண்டே தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்ற முத்தையா, இரவு 9:30 மணி ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை.

இதனையடுத்து முத்தையாவின் சகோதரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்புறங்களில் அவரைத் தேடி உள்ளனர். அப்போது காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து, வயிறு மற்றும் முதுகுபகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் முத்தையாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், மோப்பநாய் உதவியுடன் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்ற காரம்பாடு பகுதியிலும் காவல் துறையினர் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு, இந்த படுகொலை சம்பவம் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதலினால் நடைபெற்றதா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை இளைஞர் வீட்டிற்கு பெண் வந்து சென்ற நிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக பெண் வீட்டாரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் இது ஆணவ கொலையாக இருக்கும் (Nellai youth Honor Killing case ) என்ற கோணத்திலும் காவல்துறையின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் கேட்டபோது, விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவிலேயே இக்கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் காரணமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: விசிக கொடிக்கம்பம் அமைப்பதற்கே பெரும் யுத்த போராட்டம்: கண்ணீர் வடித்த கட்சி நிர்வாகி.!

Last Updated :Jul 24, 2023, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details