ETV Bharat / state

பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி! - Felix Gerald

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 5:37 PM IST

Felix Gerald: சவுக்கு சங்கர் மீதான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெலிக்ஸ் ஜெரால்டை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம், 6 மணி நேரத்துக்கு ஒருமுறை வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Felix Gerald
பெலிக்ஸ் ஜெரால்டு (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை தவறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை மே 10‌ஆம்‌ தேதி இரவு, டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, மே 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டை விசாரிக்க வேண்டும் என திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். காவல்துறை தரப்பில் 7 நாள் கஸ்டடி கேட்கப்பட்ட நிலையில், நீதிபதி ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

மீண்டும் மாலை 3 மணி அளவில் ஜெரால்டை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அந்த வகையில், ஒரு நாள் விசாரணை முடிந்த பின்னர், நேற்று (மே 21) மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் காவல்துறை விசாரணையிலிருந்த பொழுது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஏற்கனவே மே 27ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவலின்படி, அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோயம்புத்தூர் நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில், இன்று திருச்சியில் இருந்து அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் கோயம்புத்தூர் நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு மனு ஏற்கப்பட்டது. பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும், 6 மணி நேரத்துக்கு ஒருமுறை வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நேற்று, பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணை, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. மேலும், பெலிக்ஸ் ஜெரால்டு ஆறு மாதங்களுக்கு திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியது.

ஏற்கனவே, கோவையில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அந்த வழக்கிற்கு ஜாமீன் கிடைக்கும் வரை பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார். கோயம்புத்தூரில் பதியப்பட்ட வழக்கில் மட்டும் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராஜேஷ் தாஸ் வழக்கு; தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Rajesh Das Case Update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.