தமிழ்நாடு

tamil nadu

தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர் காத்த தேனி அரசு மருத்துவமனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 2:20 PM IST

Theni Govt hospital: குழந்தைகளுக்கு அரிதாக வரக்கூடிய குல்லியன் பார் சிண்ட்ரோம் என்ற தசையிழப்பு நோயால் அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளை பூரண நலமடையச் செய்த, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர் காத்த தேனி அரசு மருத்துவமனை
தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர் காத்த தேனி அரசு மருத்துவமனை

தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர் காத்த தேனி அரசு மருத்துவமனை

தேனி:தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே மாதம், போடி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி உடலில் உள்ள அனைத்து தசைகளும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே போல் கடந்த ஜூன் மாதம் தேனி அருகே விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் உடல் தசைகள் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு குழந்தைகளும் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அனைத்து பரிசோதனைகளையும் செய்த மருத்துவர்கள், குழந்தைகளுக்கு மிகவும் அரிதாக வரக்கூடிய குல்லியன் பார் சிண்ட்ரோம் (Guillain Barre Syndrome) என்ற தசைகளை பலம் இழக்க செய்யும் நோய் தாக்கி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து இரண்டு குழந்தைகளுக்கும் நரம்பு பாதிப்பை குறைக்கச் செய்யும் விலை உயர்ந்த ஐ.வி.ஐ.ஜி (IVIG - Intravenous immunoglobulin) என்ற மருந்தை அளித்தனர்.

மேலும் தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டுவிட கூடாது என்று செயற்கை சுவாசம் அளித்தனர். குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படவே மூச்சுக்குழாயில் துளையிட்டு அதன் மூலம் செயற்கை சுவாசம் அளித்தனர்.

மேலும் மூக்கு, இரைப்பை குழாய் மூலம் கிருமி தொற்றை கட்டுப்படுத்த உயர்தர ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்பட்டு, அதற்கான இயன்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த குழந்தைகள் படிப்படியாக குணம் அடைந்து தற்போது முற்றிலும் குணமடைந்து உள்ளனர்.

இதனால் மனம் குளிர்ந்த இரு குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றிய குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவர் மருத்துவர் செல்வகுமார் மற்றும் மருத்துவர் ராமசுப்பிரமணியம், நரம்பியல், மயக்கவியல், காது மூக்கு தொண்டை, நெஞ்சகத்துறை மருத்துவர்களுக்கும் செவிலியர் அடங்கிய குழுவினருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றனர்.

இது குறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் கூறுகையில், சில நாட்களுக்கு முன் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அனுமதிக்கபட்டு, பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இதனை அடுத்து தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் பூரண நலமடைந்து, பள்ளிக்கு சென்று வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்த இரண்டு குழந்தைகள், அரசு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்ட நிகழ்வு பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பொங்கல் சிறப்புத் தொகுப்பு; கரும்பு கொள்முதல் விலை ரூ.2 அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை..

ABOUT THE AUTHOR

...view details