ETV Bharat / state

பொங்கல் சிறப்புத் தொகுப்பு; கரும்பு கொள்முதல் விலை ரூ.2 அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 4:29 PM IST

Pongal Sugarcane Purchase Price
பொங்கல் சிறப்புத் தொகுப்பு கரும்பின் கொள்முதல் விலையில் 2 ரூபாய் அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

Pongal Sugarcane Purchase Price: பொங்கல் சிறப்புத் தொகுப்பிற்கு வழங்கப்படும் பன்னீர் கரும்பிற்குக் கடந்த ஆண்டு நிர்ணயித்த ரூ.33 விலைக்கே இந்த ஆண்டும் அரசு கொள்முதல் செய்ய உள்ள நிலையில் 2 ரூபாய் அதிகரித்து ரூ.35-க்கு கரும்பு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் சிறப்புத் தொகுப்பு கரும்பின் கொள்முதல் விலையில் 2 ரூபாய் அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, காமாட்சி அம்மன் கோயில், மஞ்சளாறு, சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் பொங்கல் பண்டிகை விற்பனைக்காகப் பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பொங்கல் சிறப்புத் தொகுப்பில் தமிழக அரசு ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டதோடு விவசாயிகளிடம் இருந்து ஒரு கரும்பு ரூ.33-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிட்டது. இதனால், பொங்கல் கரும்பு விளைவித்த விவசாயிகளுக்கு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை ரூபாய் 350 முதல் 370 வரை விலை ஏற்றம் கண்டது.

இந்த நிலையில், தமிழக அரசு இந்த ஆண்டும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். இத்தோடு, ஒரு கரும்பின் விலையைக் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து ரூபாய் 5 உயர்த்தி ரூபாய் 38க்கு தமிழக அரசு கொள்முதல் செய்யும் என பன்னீர் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதற்கு மாறாகப் பொங்கல் சிறப்புத் தொகுப்பிற்குக் கொள்முதல் செய்யப்படும் கரும்பிற்கு இந்த ஆண்டும் ரூபாய் 33 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், உற்பத்தி செலவு மற்றும் உர விலை அதிகரிப்பு, கூலியாட்களின் சம்பள உயர்வு, உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே இந்த ஆண்டும் கரும்பு கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைக்காத சூழ்நிலை உள்ளதால், தமிழக அரசு குறைந்தபட்சம் ஒரு கரும்பிற்கு ரூபாய் இரண்டு அதிகரித்து ரூபாய் 35க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என பொங்கல் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்கல்: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.