தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூன் 26) மேயர் கே.சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் லட்சுமணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தமைக்கு வாழ்த்து தெரிவித்தும், ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது, தஞ்சை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாமன்ற கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தில் அமையவுள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்குக் கட்டணமாக நாள் ஒன்றுக்குச் சைக்கிளுக்கு ரூ.5 ஆகவும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆகவும் நிர்ணயம் செய்வது குறித்த பொருளில், திமுக மாமன்ற உறுப்பினர்கள், ரயில் நிலைய நிறுத்துமிடங்களில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 வரை வசூலிக்கிறார்கள் நாம் குறைந்தபட்சம் அதனை ரூ 20 ஆகவோ, ரூ 15 ஆகவோ நிர்ணயம் செய்ய வேண்டும், இதனால் மாநகராட்சி வருவாய் அதிகரிக்கும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.
ஆனால், இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வம் இதனை அதிகரிக்கக் கூடாது என்றார். பெரும்பான்மை உறுப்பினர்கள் இதனை ரூபாய் 15 ஆக அதிகரிக்கலாம் என கருத்து தெரிவித்தனர், மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் பல வார்டுகளில் இன்னமும், பாதாளச் சாக்கடை பிரச்சினைகள் முழுமையாகச் சரி செய்யப்படாமல், ஆங்காங்கே கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி, சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது எனக் குற்றம்சாட்டினர். அதற்குத் துணை மேயரும், ஆணையரும், இவை விரைந்து சீர் செய்யப்படும் என்றனர்.
மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை மாதம் தோறும் நடத்த வேண்டும் 60 நாட்கள், 70 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தக் கூடாது என்றும் ஒரே கூட்டத்தில் இன்று 72 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து உறுப்பினர்கள் அனைவரும் விரிவாக எடுத்துப் பேசி விவாதம் செய்ய முடியாத அவலம் ஏற்படுகிறது எனவே தவறாமல் இனி மாதம் தோறும் கூட்டம் நடத்த வேண்டும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேயரும், ஆணையரும் இனி அப்படி கூட்டம் நடத்தப்படும் என உறுதி கூறினர்.