தமிழ்நாடு

tamil nadu

வேங்கை வயல் சம்பவத்தில் பா.ரஞ்சித் பரபரப்பு புகார்!

By

Published : Jan 13, 2023, 12:45 PM IST

Updated : Jan 13, 2023, 2:59 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் ()

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள காவல்துறை வலியுறுத்துவதாக இயக்குனர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம். வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தியபோது அந்த கிராமத்தில் சாதிய பாகுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பட்டியல் சமூக மக்களை உள்ளே அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் வழிபாடு செய்ய வழிவகை செய்தார். இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றது.இது ஒருபுறம் இருக்க, குடிநீரில் மனித கழிவு கலந்தது யார்? என்பது குறித்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதியில் புதிதாக குடிநீர் டேங் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், சம்பந்தபட்டவர்கள் யார் என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், சமத்துவம் போற்றும் அரசில் அங்கொன்றும் இங்கொன்றும் சாதிய பிரச்சனைகள் நடப்பது பெரும் வேதனையாக இருப்பதாக தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில் " தொடரும் சமூக அநீதி.. புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "என்றும் வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்" என்றும் அரசுக்கு எதிராக தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பா.ரஞ்சித்தின் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கைதிகளின் கைவண்ணத்தில் சூப்பர் ஆடைகள்; மதுரை மக்கள் வரவேற்பு!

Last Updated :Jan 13, 2023, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details