தமிழ்நாடு

tamil nadu

சிறுமி சந்தேக மரணம்: உடலுறவுக்குப் பின் காதலனே கொன்றது அம்பலம்

By

Published : Oct 15, 2021, 9:42 AM IST

Updated : Oct 15, 2021, 4:56 PM IST

13 வயது சிறுமி சந்தேக மரணத்தில், உடலுறவுக்குப் பின் அவரை அவரது காதலனே வேட்டியால் கழுத்தை நெரித்துக் கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

உடலுறவுக்குப் பின் காதலனே கொன்றது அம்பலம்
உடலுறவுக்குப் பின் காதலனே கொன்றது அம்பலம்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 9ஆம் வகுப்புப் படித்துவந்தவர் 13 வயது சிறுமி. இந்நிலையில், சிறுமி அக்டோபர் 7 அன்று இரவு அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர் ஒருவரது வீட்டிற்குப் போய்வருவதாகத் தனது பெற்றோரிடம் கூறிச் சென்றார்.

சென்றவர் அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் தேடிய சிறுமியின் உறவினர்கள் அன்றிரவே குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் தேடிய உறவினர்கள்,சிறுமி போய்வருவதாகப் பெற்றோரிடம் சொன்ன உறவினரின் வீட்டிற்குப் பின்புறம் உள்ள வாய்க்காலில் சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேன்ட் கிழிந்து ரத்தக்கரை இருந்தது.

மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து, சிறுமியின் உடலை காவல் துறையினர் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கிய குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், வில்லியநல்லூர் கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தப்ப முயன்ற இளைஞரிடம் விசாரணை

சிறுமியின் உடலை வாய்க்காலிலிருந்து உறவினர்கள் வீட்டிற்குத் தூக்கி வந்துவிட்டதால் அங்கு தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின்பேரிலேயே காவல் துறையினர் தொடர் விசாரணை செய்துவந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியினர் சிலரை காவல் துறையினர் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவந்து அவர்களை ரகசியமாகக் கண்காணித்துவந்தனர். இதனிடையே மருத்துவப் பரிசோதனை அறிக்கையின்படி சிறுமியின் சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றம்செய்யப்பட்டது.

இந்தத் தகவல் அறிந்த அதே தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பிரபாகர் என்ற இளைஞர் (25) அங்கிருந்து நழுவி பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றபோது காவல் துறையினர் அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.

சிறுமி சந்தேக மரணம்: உடலுறவுக்குப் பின் காதலனே கொன்றது அம்பலம்

சிறுமியைத் தேடுவதுபோல் நடித்த இளைஞர்

விசாரணையில் அச்சிறுமியின் உறவினரான பிரபாகர் கடந்த மூன்று மாதங்களாக அச்சிறுமியை காதலித்துவந்ததும், அச்சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளதும் தெரியவந்தது. சம்பவத்தன்று சிறுமியை தனியாக வரச்சொன்ன பிரபாகர் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்.

பின்னர், அப்பகுதி இளைஞர்களுடன் சிறுமி இயல்பாகப் பேசுவதைக் கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயக்கமடைந்த சிறுமியை வாய்க்காலில் தூக்கிப்போட்டுள்ளார்.

இதில், வாய்க்காலில் கிடந்த சிறிது நீரில் சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரபாகர், உறவினர்களுடன் சேர்ந்து தானும் சிறுமியைத் தேடுவதுபோல் நடித்துள்ளார்.

மரணத்தில் நிலவிய சந்தேகத்திற்கு விடை

பிரபாகரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவரைக் கைதுசெய்து நாகப்பட்டினம் மகளிர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதன்மூலமாக கடந்த ஒரு வாரமாக நீடித்துவந்த சிறுமியின் மரணத்தில் நிலவிய சந்தேகத்திற்கு விடை கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: உ.பி.,யில் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்: பாலியல் வன்புணர்வுக்குள்ளான 13 வயது சிறுமி

Last Updated :Oct 15, 2021, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details