ETV Bharat / state

“முதலமைச்சரை ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது”.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கருத்து! - Savukku Shankar Goondas Act

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 5:23 PM IST

Savukku shankar goondas case postponed: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து டியூபர் சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த வழக்கின் விசாரணையை, நாளை (மே 24) விசாரிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம்
சவுக்கு சங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 23) உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மே 12ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2.15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் தரப்பிற்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: கிளாம்பாக்கம் விவகாரம்.. சவுக்கு சங்கரை காவலில் எடுக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் முடிவு..? - Savukku Shankar Issue

இந்த வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில், குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின், இந்த வழக்கை நாளை (மே 24) விசாரிப்பதாகக் கூறி, விசாரணையை உத்திவைத்தனர்.

இதேபோல, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையையும் நாளைக்கு (மே 24) தள்ளிவைப்பதாகக் கூறினர்.

தொடர்ந்து, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் எனவும், என்னவெல்லாம் செய்ய மாட்டார் எனவும் உத்தரவாதம் அளித்து பிரமாண மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார், அதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக அவரை இன்று மாலையே சிறையில் சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் குண்டாஸ் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை கமிஷனருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - Savukku Shankar Goondas Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.