தமிழ்நாடு

tamil nadu

நூறுநாள் வேலையில் இடையூறு... பெண் தற்கொலை... நீதி கேட்டு போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

By

Published : Apr 13, 2023, 5:49 PM IST

100 நாள் வேலை திட்ட பணி பொறுப்பாளராக, தன்னை வேலை செய்யவிடாமல் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி எழுத்தரும் தடுத்ததால் பெண் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மதுரை: திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், கணேசன். அவரது மனைவி நாகலட்சுமி (31). இவருக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி என 5 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மாவட்ட ஆட்சியர் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராகப் பணி வழங்கி, ஒன்றரை ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில நாட்களாக நாகலட்சுமி பணிக்குச் செல்லும்போது மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி, இப்பணியினை தர இயலாது எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், மனம் உடைந்த நாகலட்சுமி நேற்று ( ஏப்.12 ) பிற்பகல் மையிட்டான்பட்டி கிராமத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வதற்காகப் பேருந்தில், தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றார்.

அப்போது சிவரக்கோட்டை அருகே உள்ள அனுமன் கோயில் பகுதிக்கு அரசுப்பேருந்து வந்தபொழுது நாகலட்சுமி தன்னுடைய 2 குழந்தைகளையும் அருகில் பயணம் செய்த சகப்பயணிகளிடம் கொடுத்துவிட்டு, திடீரென பேருந்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கள்ளிக்குடி காவல் துறையினர், அவசர ஊர்தி மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு படுகாயமடைந்த நாகலட்சுமியை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மேலும், காவல் துறையினர் விசாரணையில் இறந்த நாகலட்சுமியின் கைப்பையில் கடிதம் ஒன்று இருந்ததாகவும் கடிதத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராகப் பணிபுரிய ஆட்சியர் பணி வழங்கியதாகவும் அந்த வேலையை தனக்கு வழங்கமாட்டேன் என்று மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் தவறாக பேசி மனதை காயப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக தான் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஏன் புகார் அளிக்கிறாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி தற்கொலை முயற்சிக்கு என்னை ஆளக்கியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’தனது தற்கொலை முயற்சிக்கு முக்கியக்காரணம் மையிட்டான்பட்டி கிளார்க் முத்து, வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் ஆகியோர் தான். இவர்கள் என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்தியது தான், தனது சாவுக்குக் காரணம்’ எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகலட்சுமி உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இறந்த நாகலட்சுமியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கும் வகையில் அவர் குறிப்பிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க:ஆருத்ரா மோசடி; போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்.. சிக்கும் பாஜக முக்கியப்புள்ளிகள்.. அடுத்து?

ABOUT THE AUTHOR

...view details