கன்னியாகுமரி: சுசீந்திரம் அடுத்த தேரூர் பகுதியைச் சேர்ந்தவர் வனத்துறை ஊழியரான ஆறுமுகம் ஆரல்வாய்மொழி வன சோதனை சாவடியில் பணியிலிருந்தவர். இவரது மனைவி யோகேயேஸ்வரி, இந்தநிலையில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி இருவரும் கடத்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தாம் தேதி நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த தேரூர் இசக்கி அம்மன் கோயில் எதிரே ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்கான காரணம் பின்னணி குறித்து தெரியாத நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய அதிமுக நிர்வாகி சகாயம் உட்பட கூலிப்படையினர் என 11 பேர் வெவ்வேறு கால கட்டங்களில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கானது 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் இரட்டை கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து முழு விவரங்கள் வெளியாகாமலிருந்து வந்தன. மேலும் கொலை நடத்தப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதே போல் இருவரின் உடல்களிலிருந்த துப்பாக்கி குண்டுகளும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது என அப்போது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.