கோயம்புத்தூர்:கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு 3ஆயிரத்து 479 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். மாநில அளவிலான வங்கிகள் குழு (SLBC) மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மொத்தம் 948 வங்கி கிளைகள் வாயிலாக இந்த கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
முக்கியமாக சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர், சாலையோர வியாபாரிகள், வேளாண் உற்பத்தியாளர்கள் , பட்டதாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் கூறியதாவது, “வங்கியை தேடி அலைகின்ற காலம் மாறி வங்கிகள் தேடி வந்து கடன் கொடுக்கின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பலரும் பலன் பெற்று வருகின்றனர்” என்றார். நிர்மாலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போதே, விழாவில் கலந்து கொண்ட சாய்பாபா காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற தொழில்முனைவோர், தனக்கு வங்கி கடன் உதவி அளிக்கவில்லை எனவும் வங்கி கடன் வழங்க கோரி விண்ணப்பித்து பல மாதங்களாகியும் உரிய பதில் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.