கோயம்புத்தூர்:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விசாரணை வலையத்துக்குள் வருவதற்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனிடையே அவரது சகோதரர் தனபால் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகினார்.
சுமார் 7 மணி நேரத்திற்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "சிபிசிஐடியின் எஸ்பி மற்றும் 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரனை நடைபெற்றது. வருகிற 26ஆம் தேதி மீண்டும் ஆஜராக சொல்லியுள்ளனர்" என கூறினார்.
விசாரணைக்குப் பின் மனதில் இருந்த பாரம் பாதி குறைந்துள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை தனக்கு நிறைவாக இருந்ததாகவும், விசாரணையில் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை சொல்லியுள்ளதாவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி, ஆத்தூர் இளங்கோவன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வெங்கடேஷ், முன்னாள் எம்எல்ஏ, யூனியன் சேர்மன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோருடைய பினாமி உள்ளிட்ட நபர்கள் இதில் வருகிறார்கள்" என கூறினார்.