ETV Bharat / state

நாங்குநேரி விவகாரம்: ‘மாணவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்'.. 36 பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பணம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 10:02 PM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்களால் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் குறித்து 36 பரிந்துரைகளை அரசிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது என பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.

Etv Bharat பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
Etv Bharat பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்துறை வசிக்கும் 12ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பொது பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரப்பாபு, நாங்குநேரி பகுதிக்கு நேரில் சென்று அங்கு ஆராய்ந்து தற்போது உடனடியாக எடுக்கக்கூடிய 36 பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளார்.

இது குறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது, “திருநெல்வேலியில் நாங்குநேரி சம்பவத்தை குறித்து ஆய்வு செய்தோம். தமிழ்நாட்டில் சாதிய சக்திகள் மாணவர்களை மையமாகக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதில்லை, அதனால் சாதி ஒழிப்பு பற்றியோ பாகுபாடு பற்றியோ பேசுவதில்லை.

அனைவரிடமும் சாதி வெறி உள்ளது என்ற கருத்து தவறானது. நாங்கள் ஆய்வு மேற்கொண்டதை தமிழ்நாடு அரசிடம் கொடுத்துள்ளோம். இதில் பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளும் சம்மந்தப்பட்டிருக்கிறது. அரசு உடனடியாக ஒரு சில வேலைகளை செய்ய வேண்டும். நாங்குநேரியில் பாதிக்கபட்ட மாணவனுக்கும், அவரின் தங்கைக்கும் உயர் சிகிச்சை செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அரசு செலவில் அவர்கள் விரும்பிய படிப்பை படிக்க வைத்து. வீடு வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும்.

அந்த பகுதியில் 6 கிராமங்கள் காணவில்லை. குடிநீர், போக்குவரத்து என அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். சிறப்பு உட்குறு திட்டத்தை பயன்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இடம் பெயர்தல் செய்ய நினைத்தால் அதற்கும் வழிவகை செய்து தர வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட பிள்ளைகள் அவருடன் படித்த வகுப்பிலேயே இருந்தபோதும் சாதி வெறியை துண்டியவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. மாணவர்கள் அல்லாதவர்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அவர்கள் படிக்க விரும்பினால் அரசு படிக்க வைக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை மற்றும் காவல் துறையில் உள்ளவர்களுக்கும் சாதி உணர்வு உள்ளது. ஜாதி உணர்வு உள்ள அதிகாரிகளை வேறு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்ய வேண்டும். அரசு சாதிய சக்திக்கு துணை நிற்க கூடாது. பாலியல் ரீதியான சீண்டல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்குநேரி சம்பவம் முற்றுப்புள்ளி இல்லை, அரசு உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்யவில்லை என்றால் மேலும் தொடரும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தாக்குதலுக்கு உள்ளான 12ஆம் வகுப்பு மாணவருக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ரத்த நாளங்கள், நரம்பு, தசை, எலும்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் குறித்து துறைசார்ந்த மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து, மாணவர் முழுமையான குணமடைய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முடியும்வரை மாணவர் மருத்துவமனையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சைத் தொடர வேண்டும்.

காவல் துறைத் தலைவராக இருந்த W. I.தேவாரம், மிகவும் மோசமான விபத்தில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அத்தகைய கோர விபத்தின் பாதிப்பில் இருந்து மீண்டும் அதே மிடுக்குடன் காவல் துறைத் தலைமைப் பணியை மேற்கொண்டார். அன்றைய தேதியில் அத்தகைய சிகிச்சை சாத்தியப்பட்டது என்கின்றபோது, இன்று மருத்துவ சிகிச்சை முறையில் பல்வேறு முன்னேற்றம் அடைந்துள்ளது.

மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. நரம்புகள் பல இடங்களில் வெட்டப்பட்டுள்ள 17 வயது 12ஆம் வகுப்பு மாணவருக்கு வளர்ச்சியடைந்துள்ள மருத்துவ சிகிச்சை முறையை முழுமையாக பயன்படுத்தி, பாதிப்புக்குள்ளான மாணவர் மீண்டும் முழுமையாக செயல்படும் உடல் திறனைப் பெற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர் என்பதால், பொதுத் தேர்வைச் சந்திக்க வேண்டும்.

மருத்துவமனைச் சிகிச்சையின்போது, மருத்துவமனையில் இருந்தே படிப்பைத் தொடர விரும்பினால் அதற்குரிய ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை செய்து தர வேண்டும். சிகிச்சைக்குப் பின்னர் அவர் படிப்பைத் தொடர விரும்பினால், அவர் விரும்பும் பள்ளியில், தேவைப்படின் விடுதி வசதியுடன் அவரின் பள்ளிப் படிப்பைத் தடைபடாமல் முடிக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அண்ணனின் உயிரைக்காக்க முயல்கின்ற போது தன் கைகளில் வெட்டு வாங்கிய 9ஆவது வகுப்பு மாணவிக்கும் அரசின் செலவிலும் பொறுப்பிலும் உயர்கல்வி வழங்க வேண்டும்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த, அரசு வழக்குரைஞருடன், அனுபவம் பெற்ற, மாணவர் விரும்பும் மூத்த வழக்குரைஞரைச் சிறப்பு வழக்குரைஞராக அரசு நியமிக்க வேண்டும். மாணவர் அல்லாத சிறார்கள், மேலும் ஒரு இளைஞருடன் இணைந்து குற்றம் நிகழக் காரணமாக இருந்திருக்கின்றனர். தப்பிக்க உதவுகிறார்கள் என்றால் அவர்களுக்கு குற்றத்தின் தன்மை, குற்றத்தின் விளைவு, அதில் இருந்து தப்பிக்கும் வழிகளை ஏற்படுத்தித் தர திட்டம் வகுப்பது உள்ளிட்ட அனைத்தும் தெரிந்துள்ளது. அத்தகைய பண்புகள் கொண்ட நபர்களை சிறார் என்று எப்படி கருத இயலும்?.

மாணவர் அல்லாத சிறார்கள் உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் குற்றத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் எடுத்துக் கொண்டு, கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தற்போது பிணை பெற்றிருக்கும் மாணவர்கள் அல்லாத இருவரையும் அவர்கள் வயதில் சிறார் என்றாலும் பெரியவராக சட்டப்படி அறிவித்து, அவர்களின் பிணை ரத்து செய்யப்பட வேண்டும்.

வெளியில் இருந்து இயங்கும் சக்திகளே மாணவர்கள் தீவிர குற்றங்களில் ஈடுபட காரணமாக அமைகிறது. மாணவர்கள் அல்லாதவர்களை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தி, சட்டப்படியான குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படவில்லை என்றால், மேலும் பல குற்றங்கள் நடைபெற தூண்டுதலாக அமையும். மாணவர்களை குற்றச் செயல்களில் ஈடுபடுத்த யாரும் இனி முயற்சி செய்யக் கூடாது என்பதை சமூகத்திற்கு உணர்த்தும் விதமாக இந்த வழக்கின் விசாரணையும் அதன் விளைவாக வழங்கப்படும் தீர்ப்பும் அமைய வேண்டும்.

சாதிய சக்திகள் தங்களின் சுய கௌரவத்திற்காகவும், சாதிய கட்டமைப்பிலிருந்து மக்கள் விடுபடாமல் தடுக்கவும், பட்டியலின மக்கள் மீது பல வகையான தாக்குதலைத் தொடர்ந்து நிகழ்த்துவதை மறுக்க இயலாது. சமூக நலத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகள், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து, குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். சட்டங்கள் அனைத்துமே குற்றத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
குற்றம் நடைபெற்ற பின்னர், தண்டிப்பதற்காக மட்டும் அல்ல என்பதை மாவட்ட அளவில் பணியாற்றும் அலுவலர்கள் உணர வேண்டும்” உள்ளிட்ட வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வேங்கைவயல் விவகாரத்தில் அரசு ஏன் மவுனமாக இருக்கிறது" - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.