தமிழ்நாடு

tamil nadu

தேயிலை தோட்ட கழகத்தை மூடுவது ஏற்புடையதல்ல: புதிய தமிழகம் கட்சி தலைவர்

By

Published : Nov 15, 2022, 1:48 PM IST

புதிய தமிழகம் கட்சி தலைவர்
புதிய தமிழகம் கட்சி தலைவர்

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை மூடுவது ஏற்புடையதல்ல என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 17 ஆம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற இருந்ததாகவும் இதற்காக அனுமதி கேட்டு இருந்த நிலையில் மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுக்கின்றனர் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் எனவும் கடிதம் கொடுத்துள்ளோம். நாளை மறுதினம் அனுமதி மறுத்தால், வேறு தேதி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலாளரை அணுகுவோம். எங்கள் பேரணி அமைதியை நிலை நாட்டும் முயற்சியே.

கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டி கோவையில் அமைதியை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கிலே பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு அரசு மாதம் ஒரு முறை மின் அளவீடு முறையை அமலாக்க வேண்டும், இல்லையென்றால் இது தொடர்பாக தொடர் போராட்டம் மேற்கொள்வோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம்.

அதேபோல பீக் ஹவர்ஸ் சதவீதம் குறைப்பு ஒருபோதும் தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படாது. இது ஒரு ஏமாற்று வேலை. தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தரமானது. மார்க்கெட்டிலும் நல்ல விலை போகக் கூடியது.

இந்த தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களில் வால்பாறையில் 600 குடும்பங்களின் வேலை வாய்ப்பை பறிக்க, கூடலூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை மூடுவது ஏற்புடையதல்ல. இந்த முயற்சியை கைவிட வேண்டும். அது நட்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள், இது தவறான காரணம். நிர்வாக சீர்கேடு தான் காரணம். நிர்வாகத்தை சரி செய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு 7 மருத்துவ கல்லூரி வேண்டும் - மத்திய அரசிடம் ராமதாஸ் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details