தமிழ்நாடு

tamil nadu

மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 9:57 AM IST

Cyclone Michaung: ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (5-12-2023) நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும்.

மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. முழு விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும்” என்றுதெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கடிதத்தை பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நேரில் வழங்குவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் : புயல் வெள்ளத்தால் சென்னையில் 17 பேர் பலி! அதிர்ச்சித் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details