சென்னை:தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் மே 21 அன்று படை வீரர்கள், வீர மங்கைகள், பதக்கங்கள் பெற்ற ராணுவ வீரர்களுடன் ஆளுநர் கலந்துரையாடும் ‘எண்ணித் துணிக’ நிகழ்வு நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி., “நமது படைவீரர்களையும், வீர மங்கைகளையும் (கணவர், பிள்ளைகளை இழந்த வீரப்பெண்கள்) போற்றுவதன் மூலம் நமது ஆளுநர் மாளிகை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. உங்களை கௌரவிப்பதில் பாக்கியசாலியாக உணர்கிறோம்.
ஒரு வலிமையான ராணுவம் என்பது தேசத்தின் பெருமை மட்டுமல்ல, அது ஒரு பாதுகாவலனாக மட்டுமின்றி தேசத்தின் பெருமை மற்றும் கெளரவத்தின் காவலனாகவும் இருக்கிறது. ஒரு சிப்பாய் ஆயுதப் படையில் சேரும் போது - அது அவருக்கு 'வெறும் வேலை' இல்லை. தேசத்திற்கு தன்னை அர்ப்பணிப்பதோடு, நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ள அர்ப்பணிப்பாகும். அவரது உறுதிப்பாட்டை வெறும் வேலையாக நாம் பார்க்கக்கூடாது.
மோதல்கள், போர் ஏற்படும் போது, ஒட்டுமொத்த தேசமும் ராணுவத்தின் பின்னால் எழுந்து நிற்கிறது, ஆனால் சாதாரண அமைதியான காலத்தில் ஒரு சிப்பாய் தனது வாழ்நாள் முழுவதும் ஆற்றிய சேவையை நாம் பாராட்டுவதில்லை. ராணுவ வீரர்கள் பற்றி நாம் பேசும்போது ஒரு சிப்பாய் என்பவர் ஒழுக்கத்துடனும்‘தேச பக்தி’யில் உறுதியானவருமாக இருப்பார் என பேசுகிறோம். ஆனால், நம் நாட்டில், 'தேச பக்தி' மற்றும் 'தெய்வ பக்தி' எப்போதும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ராணுவத்தில் சேர்ந்த சிப்பாய் ஓய்வு பெற்று விட்டாலும் அவரது தேசப்பணி மற்றும் சிப்பாயின் கடமை முடிந்து விட்டதாக நாம் கருதக் கூடாது.
ராணுவத்தில் பணிபுரிந்த வீரர் ஓய்வு பெற்றால், சமூகம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கா நிலை உள்ளது. ஆனால், தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதற்காக அந்த முன்னாள் சிப்பாய் தமது தேசப்பற்று உறுதிப்பாட்டை கைவிடுவதில்லை. ஒரு சிப்பாய் ஓய்வு பெற்ற பிறகு முரட்டுத்தனமாக அல்லது ஒழுங்கற்றவராக மாறுவது மிகவும் அரிதாக நடக்கும் செயல், நான் அறிந்த சூழலில், இதுநாள் வரை அப்படிப்பட்ட நிகழ்வை கேள்விப்பட்டதில்லை. தாம் சரியாக கவனிக்கப்பட்டாலோ கவனிக்கப்படாவிட்டாலோ கூட அந்த சிப்பாய் ஒரு வீரனாகவே இருப்பார். அதற்காக அவர் எல்லை முன்னரங்கில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
நான் தமிழ்நாடு ஆளுநராக வந்த பிறகு எந்த இடத்துக்கோ, மாவட்ட தலைநகருக்கோ சென்றால் அங்கே முன்னாள் ராணுவ வீரர்களை சந்திக்கும்போது அதை பெருமையாக கருதுவேன். அவர்களை சந்திக்க முன்னுரிமை கொடுப்பேன். அவர்களை சந்தித்துப் பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி அவர்களை சந்திப்பதன் மூலம் ஆளும் நிர்வாகத்துக்கும் ஒரு செய்தியை நான் வழங்குகிறேன்.
அதேபோல, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்கும் போது, அவர்களுக்கு உரிய மரியாதை மற்றவர்களும் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை நான் உணர்த்துகிறேன். “முன்னாள் படையினர் நம்முடன் இருக்கிறார்கள் என்ற விழிப்பை பெற வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்” என்பதை உணர்த்துகிறேன்.
தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நமது ராணுவ வீரர்கள் விஷயத்தில் நான் ஒரு யோசனையை முன்பு குறிப்பிட்டிருந்தேன். அதை தொடர்ச்சியாகவும் கூறி வருகிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் எந்தெந்தப் பள்ளி அமைந்திருக்கிறதோ, அவற்றில் அந்த பகுதி அல்லது மாவட்ட வரம்பில் உயிரிழந்த ராணுவ வீரரின் படத்தை மாட்டி பெருமைப்படுத்துங்கள். அந்த வீரரின் உயிர்த்தியாக நாளில் அவருக்காக ஒரு சிறிய விழாவை ஏற்பாடு செய்யலாம்.