தமிழ்நாடு

tamil nadu

'நீர்மட்டம் அதிகம் உள்ள ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றப்படும்'

By

Published : Oct 13, 2021, 1:58 PM IST

water
water

சென்னையில் உள்ள மெட்ரோ ஏரிகளுக்குத் தொடர்ந்து நீர் வருவதால் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக நீர்மட்டம் அதிகம் உள்ள ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படும் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில வாரங்களாக சென்னையின் சுற்றுவட்டாரங்களில் பெய்த கன மழையினால் மெட்ரோ எரிகளான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் ஏரிகளில் கணிசமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேலும் பூண்டி ஏரிக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து நீர் தொடர்ந்துவருவதால் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. எனவே பொதுப்பணித் துறை அலுவலர்கள் இரண்டு நாள்களுக்கு முன்பு உபரிநீரை வெளியேற்றினர்.

ஏரிகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு

மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பின் கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மில்லியன் கியூபிக் அடியாகும். தற்போது ஏரிகளின் நீர் இருப்பு ஒன்பதாயிரத்து 658 மில்லியன் கியூபிக் அடியாக உள்ளது. மேலும் இந்த மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கனமழை பெய்தால் ஏரிகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பொதுப்பணித் துறை மெட்ரோ ஏரிகளைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறது" எனப் பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். மேலும் உபரிநீரை எந்த ஏரிகளிலிருந்து வெளியேற்றலாம் என்பதைப் பொதுப்பணித் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை முடிவுசெய்யும் என்றும் கூறினார்.

மற்றொரு அலுவலர் கூறுகையில், "அனைத்து மெட்ரோ ஏரிகளிலும் ஏற்கனவே பராமரிப்புப் பணிகள் குறிப்பாக தூர்வாருதல், கரையைப் பலப்படுத்தும் பணிகள் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டுள்ளன.

கால்வாய் மூலம் உபரிநீர் வெளியேற்றம்

எனவே நீர்மட்டம் அதிகமாக இருந்தாலும் கரை உடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் அனைத்து மதகுகளும் நல்ல முறையில் சீர் செய்யப்பட்டுள்ளன. நீர் வரத்தைப் பொறுத்தே உபரிநீர் திறக்கப்படும்.

மழை நீர் வீணாகுவதை விரும்பவில்லை. மேலும் நீர் குறைவாக உள்ள ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் உபரி நீர் வெளியேற்றப்படும்" எனத் தெரிவித்தார்.

சென்னை மண்டத்தில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ஏரிகளை இரவு நேரங்களிலும் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்ன அவர், நீரின் அளவை பொதுப்பணித் துறை, பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இன்றைய நிலவரப்படி பூண்டி நீர் தேக்கத்திலிருந்து 1064 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஏரிக்கு 694 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 138.95 அடியாக உள்ளது. இதேபோல செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 82.32 அடியாக உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிலிருந்து பாறைகள் வழங்க வேண்டும் - கேரள அமைச்சர் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details