சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 15ந் தேதி 8 என ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு, 16ந் தேதி இரட்டை இலக்கத்திற்கு மாறியது. இதனையடுத்து பொதுச் சுகாதாரத்துறை இன்று(டிச.17) வெளியிட்டுள்ள கரோனா தொற்று குறித்த அறிவிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உலகையே உலுக்கிய கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து சிங்கப்பூர், கேரளாவில் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பின் போது அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதோடு, முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.