தமிழ்நாடு

tamil nadu

குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீபத்தில் குறைந்துவிட்டது! - வேதனை தெரிவித்த நீதிபதிகள்

By

Published : Sep 15, 2022, 9:48 PM IST

’குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீபத்தில் குறைந்துவிட்டது..!’ - உயர் நீதிமன்றம் வேதனை
’குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீபத்தில் குறைந்துவிட்டது..!’ - உயர் நீதிமன்றம் வேதனை

குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீப காலமாக குறைந்துவிட்டதாக வேதனைத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை:தமிழ்நாடு காவல் துறையின் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தங்களை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், மனுதாரர்கள் 40 வயதைக் கடந்துவிட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும், அவர்களை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.

இதை ஏற்று நால்வரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி, சமூகத்தில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு நேர்மை, ஒழுக்கம் மற்றும் கண்ணியம் மிகவும் முக்கியம் என குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாகக் குற்றச்சாட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, சட்டம் ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்வது உயர் அலுவலர்களின் பொறுப்பு எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டதாக வேதனைத் தெரிவித்துள்ள நீதிபதி, நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் சட்டம் ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு: சிபிசிஐடி மீண்டும் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details