தமிழ்நாடு

tamil nadu

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 'மரியாதைக்குரிய' அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 9:41 AM IST

Minister Udhayanidhi Stalin: யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கற்றுக்கொடுத்துள்ளதாகவும்; சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
Minister Udhayanidhi Stalin vs Nirmala Sitharaman
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை:திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், மழை குறித்து முன்னெச்சரிக்கை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை எனக் கூறியிருந்த தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைத்தளத்தில், சிலரிடம் அண்ணாவைப் போல - சிலரிடம் கலைஞரைப் போல, சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள். மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம். வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டு மழை வெள்ள பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மழை குறித்த முன்னெச்சரிக்கை சரியாகக் கொடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையத்தையும், குறிப்பாக வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு பதில் அளித்தார்.

அதேபோல, மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய வெள்ள நிவாரண நிதி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, 'அவர்கள் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம். அப்பன் வீடு ஆத்தா வா.. போன்ற பேச்சுகள், அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல' என காட்டமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வெளிநாட்டில் உள்ள அதிநவீன தொழில்நுட்பம் ஏன் இங்கே இல்லை? - அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

ABOUT THE AUTHOR

...view details