ETV Bharat / state

சவுக்கு சங்கர் வழக்கில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்.. இருந்தாலும் சிறை தான்! - Felix Gerald bail

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 11:04 PM IST

Felix Gerald: ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெலிக்ஸ் ஜெரால்டு புகைப்படம்
பெலிக்ஸ் ஜெரால்டு புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை மே 10‌ஆம்‌ தேதி இரவு டெல்லியில், திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, மே 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டை விசாரிக்க வேண்டும் என திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

காவல்துறை தரப்பில் 7 நாள் கஸ்டடி கேட்கப்பட்ட நிலையில், நீதிபதி ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மீண்டும் மாலை 3 மணி அளவில் ஜெரால்டை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அந்த வகையில், ஒரு நாள் விசாரணை முடிந்த பின்னர், நேற்று (மே 21) மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியிடம் காவல்துறை விசாரணையிலிருந்த பொழுது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து, ஏற்கனவே மே 27ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவலின்படி அவர் திருச்சி மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், இன்று (மே 22) ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணை, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. பெலிக்ஸ் தரப்பு வழக்கறிஞர் கென்னடி ஆஜராகி வாதங்களை முன் வைத்து, பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் குற்றவியல் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும், பெலிக்ஸ் ஜெரால்டு ஆறு மாதங்களுக்கு திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

ஏற்கனவே, கோவையில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அந்த வழக்கிற்கு ஜாமீன் கிடைக்கும் வரை பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார். கோயம்புத்தூரில் பதியப்பட்ட வழக்கில் மட்டும் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை கழிவுநீர் ஆற்றில் கலப்பு? விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு! - Medical Waste Mixed River

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.