தமிழ்நாடு

tamil nadu

வங்கக்கடலில் புயல் சின்னம்: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 5:47 PM IST

Tamil Nadu Weather: தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 4ஆம் தேதி 'புயல் சின்னம்' கரையை கடக்க உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:வங்ககடலில் பகுதிகளில் புயல் சின்னம் அதாவது வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட தகவலில், 'தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (01.12.2023) காலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (டிச.1) காலை 8:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 760 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 960 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

எப்போது புயல் கரையை கடக்கும்: இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.2) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3.12.2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி மாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை:இந்நிலையில், நாளை(டிச.2) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத்தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி அன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மிக கனமழைக்கு வாய்ப்பு:டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் மழை அளவு குறையும்.

தரைகாற்று எச்சரிக்கை: விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: அடுத்து வரும் 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதி மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மிரட்ட போகுதா மிச்சாங் புயல்..! வானிலை மையம் தெரிவிப்பது என்ன..?

ABOUT THE AUTHOR

...view details