தமிழ்நாடு

tamil nadu

சொத்துக்குவிப்பு வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் 2ஆவது நாளாக விசாரணை

By

Published : Oct 26, 2021, 3:13 PM IST

எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் 2ஆவது நாளாக விசாரணை

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக சென்னை, ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்று ஆஜராகியுள்ளார்.

சென்னை: முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் மனைவி விஜயலட்சுமி, அவரது சகோதரர் சேகர் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக 55 விழுக்காடு சொத்துக்களை குவித்ததாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் முன்னதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 22ஆம் தேதி எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 26 இடங்களில் சோதனை நடத்தி, 25 லட்சம் ரூபாய் பணம் உள்பட பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் 2ஆவது நாளாக விசாரணை

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், நேற்று (அக்.25) சென்னை, ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

2ஆவது நாளாக விசாரணை

குறிப்பாக வருமானத்துக்கு அதிகமாக 2.85 கோடி ரூபாய் சொத்துக்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த சொத்துக்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று எட்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக மீண்டும் விசாரணை தொடர்கிறது.

இதனிடையே நேற்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து உரிய ஆவணங்களும் தங்களிடம் உள்ளதாகவும், முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கை சட்டரீதியாக சந்திக்கத் தயார் எனவும் எம்.ஆர் விஜயபாஸ்கர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்களுக்கு அறிவுரை வழங்க முதலமைச்சருக்கு அறிவுறுத்திய ஓபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details