மக்களுக்கு அறிவுரை வழங்க முதலமைச்சருக்கு அறிவுறுத்திய ஓபிஎஸ்!

author img

By

Published : Oct 26, 2021, 1:29 PM IST

ஓ பன்னீர்செல்வம்

பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட பகுதியில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லவும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை : இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, கரோனா தொற்று நோயின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதன் காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், எந்தக் கட்டுப்பாட்டினையும் பின்பற்றாத சூழ்நிலையே பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது என்பதுதான் யதார்த்த நிலை.

ஜவுளிக் கடைகளிலும், இனிப்புக் கடைகளிலும், பட்டாசு கடைகளிலும் அலைமோதும் கூட்டத்தைப் பார்க்கும்போது தீபாவளிப் பண்டிகையை விமரிசையாக மக்கள் கொண்டாட முடிவெடுத்து விட்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும், அரசினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

சுட்டிக் காட்டும் ஒபிஎஸ்

துர்கா பூஜை, நவராத்திரி விழா போன்ற பண்டிகைகளுக்குப் பிறகு, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாகவும், உயர்வு பெரிய அளவுக்கு இல்லை என்றாலும், பண்டிகைக்கு முந்தைய ஏழு நாள்களுடன் ஒப்பிடும்போது, மேற்கு வங்காளத்தில் 10 விழுக்காட்டிற்கு மேலும், அஸ்ஸாமில் 50 விழுக்காட்டிற்கு மேலும், இமாச்சலப்பிரதேசத்தில் 38 விழுக்காட்டிற்கு மேலும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாகவும் செய்திகள் வருவதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதுமட்டுமல்லாமல், கரோனா நோய்த் தொற்று ஆரம்பிக்கப்பட்ட சீனாவில் தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே இருக்கின்ற சூழ்நிலையில், சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பள்ளிக்கரணை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் புத்தாடைகளை வாங்கிச் செல்ல காலை முதலே பொதுமக்கள் வருவதையும், நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கவனத்துடன் இருக்க வேண்டும்

ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததையும், அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளான கூட்டம் கூடுதலைத் தவிர்த்தல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் அகியவை பின்பற்றாததையும் காண முடிகிறது.

இந்த நிலை தான் பிற மாவட்டங்களிலும் நிலவுவவாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற நிலைமை கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை அதிகரிக்க வழி வகுத்துவிடும். கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், இந்த தொற்று முற்றிலும் உலகத்தை விட்டு விரட்டப்படும் வரையில், பாதுகாப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியதும், பண்டிகைக் காலங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.

அறிவுரைகள் வழங்க கோரிக்கை

அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும், கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பவும், ஒரே இடத்தில் பலர் கூடுவதை தவிர்க்கவும், பண்டிகைக்குப் பிறகு கரோனா தொற்றின் தாக்கம் உயராமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கரோனா தொற்றின் தாக்கம் பண்டிகைக்குப் பிறகு தமிழ்நாட்டில் உயராமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லவும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வடகிழக்கு பருவமழை தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.