தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்… அமைச்சர் ரகுபதி

By

Published : Aug 21, 2022, 10:07 AM IST

Updated : Aug 21, 2022, 11:20 AM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அலுவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்த பின், அந்த ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை குறித்து, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தி குறிப்பு ஒன்றை நேற்று (ஆக. 20) வெளியிட்டார். அதில்,"2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட், தாமிர உருக்காலை ஆலையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிராகப் பொதுமக்கள் போராடினர்.

மே 18இல் சமர்பிக்கப்பட்டது: போராட்டம் நடத்திய 13 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமான காவல் துறை துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அப்போதைய அதிமுக அரசால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மே 18ஆம் தேதி அன்று சமர்ப்பித்தார். மேலும் விசாரணை ஆணையம் தன்னுடைய இடைக்கால அறிக்கையை 2021 மே 15ஆம் தேதி அன்று இந்த அரசுக்கு அளித்தது.

பல்வேறு ஆணைகள் பிறப்பிப்பு:அவ்வறிக்கையின் பரிந்துரையின்படி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப்பெறவும், போராட்டத்தின்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கவும், பிணையில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி பரத்ராஜ் என்பவரது தாயாருக்கு 2 லட்சம் ரூபாய் உதவித் தொகையும், திரும்பப்பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் தொடரத் தடையில்லா சான்று வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டது.

விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட, பரிந்துரைகளின் மீது அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே 18ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை, 4 தொகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளதால் அதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாலை விபத்து மரணங்களை காவல்துறை குறைத்து காட்டவில்லை...சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர்

Last Updated :Aug 21, 2022, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details