ETV Bharat / state

சாலை விபத்து மரணங்களை காவல்துறை குறைத்து காட்டவில்லை...சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர்

author img

By

Published : Aug 20, 2022, 7:20 PM IST

சாலை விபத்து மரணங்களை காவல்துறை குறைத்துக்காட்டவில்லை...சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர்
சாலை விபத்து மரணங்களை காவல்துறை குறைத்துக்காட்டவில்லை...சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர்

சாலை விபத்துகளில் ஏற்படும் விபத்துக்களை குறைத்து காட்டவில்லை என சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி. சரத்கர் தெரிவித்துள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பதால், வாகனத்தின் மதிப்பே அவ்வளவு வராது என்று சில உரிமையாளர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாகவும் அவர் கூறினார்.

சென்னை: மாநகரில் பதிவு எண் பலகைகள் இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடனும் வாகனங்கள் இயங்குவதாக சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் அடிப்படையில், சென்னை போக்குவரத்து காவல்துறை மூலம் கடந்த 4 நாட்கள் சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு தணிக்கையின் மூலம், பதிவு எண் பலகைகள் இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடனும் வந்த வாகனங்கள் தொடர்பாக 800-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கை தொடர்பாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, ”சென்னை போக்குவரத்து காவல்துறை நடத்திய இந்த சிறப்பு தணிக்கையில் மொத்தம் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

பிடிபட்டதில் 98% இருசக்கர வாகனங்கள் எனவும், முறையாக பதிவு எண் பலகை இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடன் வாகனத்தை செலுத்திய நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பதிவு எண் பலகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் பதிவு எண் பலகை இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குற்றப் பின்னணி உள்ளதா? என்றும் சம்மந்தப்பட்ட வாகனம் குற்ற வழக்குகளில் தொடர்புடையதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அவ்வாறு எதுவும் கண்டறியப்படவில்லை. பதிவு எண் பலகை பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதன் மூலம், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிவதும், விபத்து ஏற்படும் போது சம்பந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதும் எளிமையாகும் என்பதால் இந்த தணிக்கை தொடரும் என்றார்.

சாலை விபத்து மரணங்களை காவல்துறை குறைத்துக்காட்டவில்லை...சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர்

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக தினசரி 100 வழக்குகள் வீதம் வருடத்திற்கு 1 லட்சத்து 25 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், ஒட்டுமொத்தமாக அனைத்து போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக தினசரி 8 ஆயிரம் வழக்குகள் வரை போடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பதால், வாகனத்தின் மதிப்பே அவ்வளவு வராது என்று சில உரிமையாளர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாக தெரிவித்தார்.

மேலும், சாலை விபத்தில் ஏற்படும் மரணங்கள் மறைக்கப்படுவதாக செய்திகளில் வரும் தகவல்கள் சென்னைக்கு பொருந்தாது என்ற அவர், சென்னை காவல்துறை சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணங்களை மறைக்கவோ, குறைத்து காட்டவோ இல்லை என தெரிவித்தார். குறிப்பாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள் பிரிந்த பின்னர் சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 இறப்புகள் குறைந்துள்ளது என்றார்.

சாலை விதிமீறல்கள் தொடர்பான அபராதத்தை வசூலிக்க Paytm பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட QR Code முறை நல்ல முறையில் செயல்பட்டு வருவதுடன் Paytm-ன் 4.5 லட்சம் பயன்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் மூலம் அபராதத் தொகை குறித்து நினைவூட்டி வருவதாகவும், Paytm QR Code-ஐ பயன்படுத்தி இதுவரை 3-4% பேர் அபராதத் தொகையை செலுத்தியுள்ளனர்.” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐஐடி மாணவி ...செல்போனை ஆய்வு செய்ய முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.