தமிழ்நாடு

tamil nadu

அர்ச்சகர் திட்டத்துக்கு எதிராக 2 வழக்குகள் - வழக்குகளை இணைத்து விசாரிக்க உத்தரவு

By

Published : Aug 16, 2021, 4:04 PM IST

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

ஆகம விதிகளை பின்பற்றியே அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் கோயில்களில் அர்ச்சகராக நியமனம் செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை:சிஐடி நகரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்துவிட்டால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன்படி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு முரணானது. இது குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். அதுவே, அரசின் நோக்கமாகவும் இருக்கிறது.

500 கோயில்களை விட்டுத் தாருங்கள்

தமிழில் அர்ச்சனை செய்வதும், குறிப்பிட்ட பிரிவினரை தவிர பிறர் கருவறைக்குள் செல்வதும் ஆகம விதிகளுக்கு முரணானது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44 ஆயிரம் கோயில்களில், 500 கோயில்கள் மட்டுமே ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன. பிற கோயில்களிலும் ஆகம விதிகள் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த 500 கோயில்கள் தவிர 43,500 கோயில்களில் தமிழ்நாடு அரசின் திட்டப்படி அனைவரையும் அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது எனவும், ஆகம விதிகளைப் பின்பற்றி குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 38 கோயில்களுக்கான அர்ச்சகர்களை நியமித்து, அவர்களுக்கான பணி நியமன உத்தரவை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

வழக்கை இணைத்து விசாரிக்க உத்தரவு

இந்த உத்தரவை எதிர்த்து சிவாச்சாரியார்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ஆகம விதிகளைப் பின்பற்றி பயிற்சி பெறாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தனி நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சிவாச்சாரியார்கள் வழக்கில் ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அதற்கு முரணாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர்,

தலைமை நீதிபதியின் அமர்வில் இதே வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்குடன் சேர்ந்து இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details