போர்ட் மோர்ஸ்பி :பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று உள்ளார். ஜப்பான் ஹிரோசிமா நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிராந்திய ரீதியிலான பிரச்சினைகள், உலகளாவிய சவால்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து உலக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து, ஹிரோசிமா நகரில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்போன்ஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பிராந்திய பாதுகாப்பு இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவல்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து நான்கு நாட்டு தலைவர்கள் ஆலோசித்ததாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து தென்மேற்கு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு சென்றார். அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப், பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார். பொதுவாக மாலை வேளையில் தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் வழக்கம் கொண்டிராத அவர், பிரதமர் மோடிக்காக வழக்கத்தை மீறி வரவேற்பு அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.