தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: மர்ம நபரை தேடும் கேரளா போலீஸ்!

By

Published : Jun 15, 2023, 1:38 PM IST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

CCTV
பாலியல் தொல்லை

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் தம்பனூர் என்ற பகுதியில் கடந்த 12ஆம் தேதி காலை 11 மணியளவில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நபர் ஒருவர் அந்த கர்ப்பிணிப் பெண்ணைத் பின்தொடர்ந்து வந்துள்ளார். பெண்மணி வேகமாக நடந்து சென்றபோதும், விரட்டி வந்து அந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண்மணி கூச்சலிட்டதும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தெரியவந்த நிலையில், அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும், தன் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து அந்த பெண் புகார் அளிக்கவில்லை.

இருந்தபோதும், போலீசார் இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த தம்பனூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின்படி, அந்த நபர் வெள்ளை நிற சட்டை, சாம்பல் நிற பேன்ட் மற்றும் செருப்பு அணிந்திருக்கிறார். அவருக்கு 35 முதல் 45 வயது இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு முன்னணி துணிக்கடையின் ஊழியர்களுடைய சீருடையைப் போலவே உடை அணிந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தம்பனூர் பகுதியில் தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இருக்கின்றனர் என்றும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர் தான் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், சம்பவம் தொடர்பாக வேறு எந்த ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது. இந்த விவகாரத்தில் கேரள போலீசார் அண்டை மாநிலமான தமிழ்நாடு காவல் துறையின் உதவியை நாட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை போலீசார் சிறப்புக்குழு அமைத்து விசாரித்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு லண்டனில் கத்திக்குத்து; பிரேசில் இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details