தமிழ்நாடு

tamil nadu

டெல்லியில் 48 ஆயிரம் குடிசைகளை அகற்ற தடை விதிக்கக் கோரி மனு!

By

Published : Sep 11, 2020, 5:16 PM IST

டெல்லி: ரயில் தடங்கள் அருகில் அமைந்துள்ள 48 ஆயிரம் குடிசை வாழ்விடங்களை இடிக்க உத்தரவிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் 48 ஆயிரம் குடிசைகளை அகற்ற தடை விதிக்கக் கோரி மனு!
டெல்லியில் 48 ஆயிரம் குடிசைகளை அகற்ற தடை விதிக்கக் கோரி மனு!

டெல்லியின் பல்வேறு ரயில் தடங்களில் அமைந்துள்ள 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைகளையும், குடிசைவாசிகளையும் அப்புறப்படுத்த வேண்டுமென ரயில்வே வாரியத்திற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார். அரசியல் காரணங்களால் அவற்றை அப்புறப்படுத்த இயலவில்லை என ரயில்வே அமைச்சகம் கூறிவந்த சூழலில், தற்போது உடனடியாக அதற்கான பணிகளை மேற்கொள்ளும் முனைப்பில் டெல்லி அரசும், ரயில்வே வாரியமும் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகிறது.

இந்நிலையில், ரயில் தடங்கள் அருகில் அமைந்துள்ள 48 ஆயிரம் குடிசை வாழ்விடங்களை இடிக்க உத்தரவிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று (செப்டம்பர் 11) தாக்கல் செய்தார். அதில், "டெல்லி மாநகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதிகள் தொடர்பான வழக்கில் முன்னதாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், குடிசைவாசிகளுக்கு டெல்லி மாநகரத்தில் வாழும் உரிமை 100 விழுக்காடு இருக்கிறது.

அவர்களை வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு முன்பாக மறுவாழ்வு, வாழ்விடங்களை அவர்களுக்கு மத்திய மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அவற்றை உறுதி செய்யாமல் குடிசைகளை அகற்ற அனுமதி அளிக்க முடியாது என தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், மத்திய பாஜக அரசும், யூனியன் பிரதேச ஆம் ஆத்மி கட்சி அரசும் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் எந்த வாக்குறுதியும் அறிவிக்கவில்லை.

எனவே, இதற்குரிய முன்திட்டங்களை அரசு வழக்கும்வரை குடிசைப்பகுதிகளை அகற்ற தடை விதிக்க வேண்டும். அதேபோல, இது தொடர்பாக முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்" என அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2018ஆம் ஆண்டில் உத்தரவிடப்படி அத்துமீறல்களை அகற்றுவதற்காக ஏற்கனவே ரயில்வே அமைச்சகத்தால் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details