தமிழ்நாடு

tamil nadu

"3.o மீண்டும் மோடி - வேண்டும் மோடி" என்ற தலைப்பில் சுவர் விளம்பரம் - திருச்சியில் தேர்தல் பணியை தொடங்கிய பாஜக..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 6:55 PM IST

BJP wall advertisement: "3.o மீண்டும் மோடி - வேண்டும் மோடி" எனும் சுவர் விளம்பரத்துடன் திருச்சி மாவட்ட பகுதியில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரப் பணியை தொடங்கியுள்ளனர்.

சுவர் விளம்பர தேர்தல் பணியை தொடங்கிய பாஜக
சுவர் விளம்பர தேர்தல் பணியை தொடங்கிய பாஜக

திருச்சி:2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக ,திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பேச்சுவார்த்தைக் குழு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை குழுக்கள் ஆகியவற்றை அமைத்துத் தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-40 இடங்களை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பாகத் தேர்தல் பணிகளை தற்போது தொடங்கிவிட்டனர். பகுதிவாரியாகப் பொதுமக்களைச் சந்தித்து திமுக ஆட்சியில் மக்களுக்குச் செய்த திட்டங்களை எடுத்துரைத்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

அதே போன்று அதிமுகவில் கூட்டணியைப் பலப்படுத்துவது, புதிய நிர்வாகிகளை தங்களது கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் திருச்சி என்றாலே திருப்புமுனை என்று அரசியல் கட்சி வட்டாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திமுக, அதிமுக, பாஜக மற்ற கட்சிகள் அனைத்தும் திருச்சியை மையப்படுத்தி தங்களது பிரச்சாரத்தையும் தேர்தல் பணிகளையும் தொடங்கி வருகின்றனர். குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கட்சி சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டில் தங்களது கட்சியினை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் - என் மக்கள்” என்ற நடைப்பயணம் மூலம் தொகுதி வாரியாக மக்களைச் சந்தித்து மோடி ஆட்சியில் செய்த திட்டங்கள், சாதனைகள் என அனைத்தையும் எடுத்து காட்டி வாக்கு சேகரித்து வருகிறார். அதே சமயம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் ஆட்சி செய்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மக்களைக் கண்டு கொள்ளாமல் அவர்களுக்குத் தேவையான பணிகள், ஊழல் என்று தமிழ்நாட்டைச் சீரழித்து விட்டார் என குற்றம்சாட்டி வருகிறார்.

மேலும், தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக சார்பாகவும், அரசியல் வட்டாரங்கள் சார்பாகவும் தகவல்கள் கூறப்பட்டு வரும் நிலையில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஓபிஎஸ், பாஜகவினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு மட்டும் 2 முறை தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி வருகை தந்தார். தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த மோடி 2 முறையும் திருச்சியை மையப்படுத்தியே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆகையால் திருச்சியில் எந்த பணிகளைத் தொடங்கினாலும் நிச்சயம் அது வெற்றி அடையும் என்று அரசியல் வட்டார மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு.

குறிப்பாக, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் இணை பொறுப்பாளராக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொகுதி முழுவதும் பூத் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி மலைக்கோட்டை மண்டல சற்றுக்குப்பாறை பகுதியில் "3.o மீண்டும் மோடி வேண்டும் மோடி" எனும் சுவர் விளம்பரம் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்து கொண்டு சுவர் விளம்பரத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஒண்டி முத்து, பொருளாதார பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.வி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மதுரை பூரணம் அம்மா முதல் முகமது ஜூபேர் வரை குடியரசு தின விருதுகள் விவரம்!

ABOUT THE AUTHOR

...view details