ETV Bharat / state

மதுரை பூரணம் அம்மா முதல் முகமது ஜூபேர் வரை குடியரசு தின விருதுகள் விவரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 5:26 PM IST

Updated : Jan 26, 2024, 7:47 PM IST

Etv Bharat
Etv Bharat

Republic Day MK Stalin Gave Awards: சென்னையில் குடியரசு தினவிழாவில், ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரை ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது உள்ளிட்ட பல தமிழ்நாடு அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.

மதுரை பூரணம் அம்மா முதல் முகமது ஜூபேர் வரை குடியரசு தின விருதுகள் விவரம்!

சென்னை: குடியரசு தினத்தையொட்டி, இன்று (ஜன.26) 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் சென்னை காமராஜர் சாலையில் நடந்த குடியரசு தினவிழாவில் வழங்கினார். இது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:-

1. வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் 2024

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ரூ.9,000 மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இவ்வாண்டுக்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:-

  • யாசர் அராபத் - சிங்கித்துறை, காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்

தென் மாவட்டங்களில் 2023, டிச.17, 18 தேதிகளில் பெய்த அதி கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், தண்ணீர் பந்தல் கிராமத்தில் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர்.

இவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையைச் சேர்ந்த மீனவர் யாசர் அராபத் என்பவரிடம் உதவி கோரப்பட்டது. இதையடுத்து அவரது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த தண்ணீர்பந்தல் கிராம மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டனர். மேலும் அங்குள்ள ஒரு உப்பளத்தில் தவித்துக் கொண்டிருந்த 13 உப்பளத் தொழிலாளர்களையும் 2 மணிநேரக் கடும் போராட்டத்திற்குப் பின் மீட்டனர்.

தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களைக் காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி, யாசர் அராபத் அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் இந்த ஆண்டிற்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்தது.

  • செல்வன் தே.டேனியல் செல்வசிங் - திருநெல்வேலி

அதேபோல, திருநெல்வேலியில் வெள்ளத்தின் நடுவே தனது உயிரையும் துச்சமென நினைத்து திருநெல்வேலியை சேர்ந்த தேவகுமார் மகன் செல்வன் டேனியல் செல்வசிங், வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு நீந்திச் சென்றபடியே பொதுமக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் உள்ளிட்டவைகளை தன்னலம் கருதாமல் துணிச்சலோடு வழங்கினார். 2 நாட்கள் தன்னார்வ மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

அகவே, தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இவரின் செயலை பாராட்டி, செல்வன் தே.டேனியல் செல்வசிங்கிற்கு 2024 ஆம் ஆண்டிற்கான அரசின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

  • சு.சிவக்குமார் வட்டாட்சியர்

வரலாறு காணாத அதிக கனமழையால் ஸ்ரீவைகுண்டம் வட்டம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் வரப்போவதாகவும், கரையில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை இரவு 10:00 மணியளவில் ஒவ்வொரு வீடாக சென்று முன்னெச்சரிக்கை செய்து வீடுகளை விட்டு வெளியேற்றினார்.

கூடவே, அனைவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்று பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்தார். இவரது நேரடி கண்காணிப்பில் சுமார் 2400 பேர் துரிதமாக மீட்கப்பட்டனர். தன்னலம் கருதாமல் துணிச்சலோடு மீட்புப் பணியில் ஈடுபட்ட இவரது செயலுக்காக அரசு 2024 ஆம் ஆண்டிற்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி சிறப்பித்தது.

2. கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், 2024

தமிழ்நாடு அரசு, மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' என்ற பதக்கத்தைத் தோற்றுவித்து, மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25,000-க்கான காசோலையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இந்நிலையில், 2024 ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜூபேருக்கு வழங்கப்பட்டது.

'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' பெற்ற முகமது ஜூபேர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து உருது பள்ளி தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது ஜூபேர் Alt News என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்.

அவரது இந்தபணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் வற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவுகிறது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மைத்தன்மையை சரிப்பார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றதல்ல என்பதை உறுதி செய்து தடுத்தார்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் சாதி, மத, இனம், மொழியால் ஏற்படும் வன்முறைகள் நிகழாதவண்ணம் செயல்பட்டார் என்பதைப் பாராட்டும் வகையில், இவருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' வழங்கப்பட்டது.

3. முதலமைச்சர் சிறப்பு விருது: உ.ஆயி அம்மாள் என்ற பூரணம் மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் யா.கொடிக்குளம் கிராமம் உ.ஆயி அம்மாள் என்ற பூரணம் தான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு 1.52 ஏக்கர் நிலத்தை மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக தனாக முன்வந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவதற்காக தானமாக அளித்துள்ளார். தனது அனைத்து சொத்துக்களையும் ஏழை மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கல்விக்காக அளித்து உதவி செய்து வருகிறார்.

அன்னார் மதுரை தல்லாகுளம் கிளை கனரா வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். தனக்கு தந்தை முலமாக கிடைத்த புல எண். 18 உட்பிரிவு 1-ல் உள்ள சொத்து 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை தனது மகள் ஜனனியின் நினைவாக அவரது விருப்பத்தினை நிறைவேற்றும் பொருட்டு அப்பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்ற நோக்கில் முதன்மைக்கல்வி அலுவலரின் பதவி வழிப் பெயருக்கு தானப்பத்திரம் பதிவு 05.01.2024-ல் மேற்கொண்டு. 08.012024-ல் முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார்.

இவர் மதுரை தல்லாகுளம் கிளை கனரா வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். தனது தந்தை மூலம் கிடைத்த புலம் எண்.18 உட்பிரிவு 1-ல் உள்ள 1.52 ஏக்கர் நிலத்தை மறைந்த தனது மகள் ஜனனிளின் நினைவாக ஏழை மாணவர்களின் கல்வியை உயர்த்தும் நோக்கத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் பதவி வழிப் பெயருக்கு தானப்பத்திரம் பதிவு 05.01.2024-ல் மேற்கொண்டு. 08.012024-ல் முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார்.

இவருடைய தன்னலமற்ற கொடை உள்ளத்தைப் பாராட்டி, முதலமைச்சர் சிறப்பு விருது என இன்று குடியரசு தினவிழாவில் ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் குடியரசு தின விழா: களைகட்டிய அணிவகுப்பு.. விருது பெற்றோர் விவரம் உள்ளே

Last Updated :Jan 26, 2024, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.