தமிழ்நாடு

tamil nadu

சாந்தன் உடலுக்கு திருமாவளவன், பேரறிவாளன், நளினி நேரில் அஞ்சலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 3:06 PM IST

Santhan Passed Away: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், சாந்தன் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அறிவிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இலங்கைத் தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு கல்லீரல் செயல் இழப்பு காரணமாக, அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த சாந்தனுக்கு நேற்று (பிப்.27) இரவு உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

செயற்கை சுவாசம் மூலம் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (பிப்.28) அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளபட்டும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சாந்தன் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் உள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர் இலங்கை திரும்ப சமீபத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:விடுதலையான பிறகும் நிறைவேறாத ஆசை.. தாய்மடி சேராமல் பிரிந்த சாந்தனின் உயிர்!

ABOUT THE AUTHOR

...view details