தமிழ்நாடு

tamil nadu

பைக்கில் சென்ற முதியவருக்கு அரிவாள் வெட்டு..மர்ம கும்பலுக்கு நாட்றம்பள்ளி போலீசார் வலைவீச்சு - Attempt to Murder

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 11:44 AM IST

Attempt to Murder case in Tirupattur: நாட்றம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரை கத்தியால் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tirupattur Attempt to Murder case
Tirupattur Attempt to Murder case

திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ரயில்வே நிலையம் பகுதியைச் சேர்ந்தவர், முருகேசன். இவர் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகத்தில் பணியாற்றி, இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். இந்நிலையில், முருகேசன் தன்னுடைய வீட்டிலிருந்து இருச்சக்கர வாகனத்தில் பச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம நபர்கள், வெளிச்சம் இல்லாத இடத்தில் திடீரென முருகேசனை தாங்கள் கொண்டு வந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து, முருகேசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்துள்ளனர்.

ஆனால், அவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் கத்தியை அங்கேயே போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகேசனை மீட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முருகேசனை வெட்டியவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? எதற்காக வெட்டினார்கள்? என்பன குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரை, மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:உபியில் கட்டுமான பணியில் இருந்த பாலம் இடிந்து விபத்து - என்ன காரணம்? - Uttar Pradesh Bridge Collapse

ABOUT THE AUTHOR

...view details