தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகவில் கல்லூரி மாணவரி கொலை வழக்கு! அரசை கண்டித்து ஏபிவிபி அமைப்பினர் தொடர் போராட்டம்! - Karnataka College girl murder

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 7:56 PM IST

கர்நாடாகவில் கல்லூரி வளாகத்தில் மாணவி கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி மாநிலம் முழுவது ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

பெங்களூரு :கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வத் நகராட்சி கவுன்சிலர் நிரஞ்சன் ஹயர்மத் என்பவரின் மகள் நேஹா ஹயர்மத். ஹூப்ளியில் உள்ள பி.வி.பூமரடி என்ற கலை கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நேஹா, இளைஞர் ஒருவரால் கீழே தள்ளிவிடப்பட்டு கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெலகவி மாவட்டம் சவுதாத்தி பகுதியைச் சேர்ந்த பயாஸ் கோண்டுநாயக் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தற்போது பயாஸ் கோண்டுநாயக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து தும்குரு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, நேஹா - பயாஸ் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், இதனிடையே நேஹா வேறு இளைஞரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் அதை தெரிந்து கொண்ட பயாஸ் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

அதேநேரம் நேஹாவின் தந்தையும் காங்கிரஸ் கவுன்சிலருமான நிரஞ்சன் ஹயர்மத், தனது மகளை நீண்ட நாட்களாக பயாஸ் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு தனது மகள் இணங்காத நிலையில் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இரு வேறு கருத்துகள் வேகமாக பரவிய நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவுக்கு எதிராக கண்டனம் எழுந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா மன்னிப்பு கோரினார். மேலும், தனது கருத்துக்கு நேஹாவின் பெற்றோரிடம் மன்னிப்பு கோருவதாகவும், இந்த விவகாரத்தை பாஜகவினர் அரசியலாக்க பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பொறுப்பு உணர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பயாஸ் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே தங்களது மகனுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை விரும்புவதாக பயாசின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து பேசிய பயாஸின் தாயார், உயிரிழந்த மாணவி நேஹாவின் பெற்றோர் படும் துயரத்தை தாங்கள் உணர்வதாகவும், இந்த சம்பவத்தில் தங்களது மகனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை விரும்புவதாகவும் அதையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தக் கோரி பாஜகவின் மாணவர்கள் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :கேரளாவில் அடுத்தடுத்து போலி வாக்குப்பதிவு சம்பவம்! தேர்தல் அலுவலர்கள் பணியிடை நீக்கம்! என்ன நடக்கிறது? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details