வீடியோ: திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள திம்பம், ஆசனூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இதனால் சிறுத்தைகள் மக்கள் கண்ணில் அடிக்கடி தென்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதையிலும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் தென்பட்டு வருகின்றன. அதன்படி கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு புறப்பட்ட காய்கறி டெம்போ திம்பம் வழியாக சென்று கொண்டிருந்தது.
இந்த டெம்போ திம்பம் மலைப்பாதையின் 24 ஆவது வளைவில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே சிறுத்தை ஒன்று தென்பட்டுள்ளது. அதன்பின் வாகனத்தின் முன்னால் ஓடி மறைந்துள்ளது. இந்த காட்சியை லாரி ஓட்டுநர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஏனென்றால், இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இரவு 9 மணிக்குள் திம்பம் மலைப்பாதையை கடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, இரவில் வாகனங்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், அந்த நேரத்தில் விலங்கினங்கள் சாலைகளை கடந்து செல்கின்றன.