குண்டாறு அணை பகுதியில் சுற்றுலா பயணிகளிடையே மோதல் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வைரல்!
தென்காசி: குற்றாலத்திற்கு அடுத்தபடியாக தென்காசியில் சுற்றுலாத்தளமாக விளங்கக்கூடியது குண்டாறு பகுதி. இங்கு விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்றும், இன்றும் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில், குண்டாறு பகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இன்மையின் காரணமாக அவ்வப்போது சுற்றுலா பயணிகளிடையே கடும் பிரச்சினைகள் நிலவி வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, இன்று (30.07.2023) சென்னையில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணி ஒருவருக்கும், சிவகாசியிலிருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த முதியவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சூழலில், இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் விசாரணை நடத்திய போது, சென்னையில் இருந்து வந்த சுற்றுலா பயணி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, சிவகாசி சேர்ந்த சுற்றுலா பயணியான முதியவர் ஒருவர் மது போதையில் காரின் கண்ணாடியை சரமாரியாக தக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சுற்றுலா பயணி காரில் இருந்து இறங்கி முதியவரை தாக்கியுள்ளார்.
இந்த நிலையில், இரு தரப்பினரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, தாங்கள் இருவரும் தவறு செய்து விட்டதாகவும் இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டோம் எனவும் கூறி எழுதிக் கொடுத்துவிட்டு சென்றதாக கூறினர். அதனால் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு ஏதேனும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது முதியவரை, சென்னை சுற்றுலா பயணி தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைகளில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.