குட்லஷா அவுலியா தர்கா உரூஸ் பண்டிகை..! ராணிப்பேட்டையில் கோலாகலம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 10:42 AM IST

thumbnail

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் குட்லஷா ரஹ்மத்துல்லாஹி அவுலியா தர்காவில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென ஆண்டுதோறும் 'சந்தனக்கூடு திருவிழா' நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், இந்த ஆண்டு 134வது சந்தனக்கூடு திருவிழா (உரூஸ்) பண்டிகை நேற்றிரவு (ஜன.2) கோலாகலமாக நடைபெற்றது. இப்பண்டிகை முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், வாசனை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட குதிரை ரதத்தின் வைத்து, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

அப்போது, மேளதாளங்கள் முழங்க இளைஞர்களின் சிலம்பம் நிகழ்ச்சி, வாள் வீச்சு நிகழ்ச்சி, தீப்பந்தம் சுற்றுதல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். பின்னர், தர்கா வந்தடைந்த சந்தனக்கூடை தர்கா நிர்வாக தலைவர்கள் தங்களது தலையில் சுமந்தபடி சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஹஸ்ரத் சையத் குட்லஷா ரஹ்மத்துல்லாஹி அவுலியா சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் இஸ்லாமிய பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். இவ்விழாவிற்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.