நீலகிரி கோடை விழா: மலர்க் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்! - nilgiris flower show
Published : May 13, 2024, 6:38 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைபெற்று வரும் நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நாய் கண்காட்சி போன்றவை நடைபெற்று வருகிறது. மேலும் தாவரவியல் பூங்காவில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட லட்சக்கணக்கான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு தற்போது மலர் செடிகளாகப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மேலும் பல்லாயிரக்கணக்கான மலர் தொட்டிகளில், மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு அரங்குகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஸ்னி வேர்ல்ட் வடிவமைப்பில் பல வண்ண மலர்கள், மலை ரயில், பூச்செண்டு, மிக்கி மவுஸ் போன்ற வகைகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனைக் காண்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்து வருகின்றனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை உதவி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதில் முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, சுகுனி, உருளைக்கிழங்கு, சௌசௌ, பீன்ஸ், பூண்டு, குடைமிளகாய் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த முள் சீத்தாப்பழம், பேஷன் ஃப்ரூட், ஊட்டி ஆப்பிள், ஸ்ட்ராபெரி பிக்சர்ஸ் போன்ற பழங்களும் இடம்பெற்றுள்ளது.
இதனைக் காணும் சுற்றுலாப் பயணிகள் பழக் கண்காட்சியைக் கண்டு ரசிப்பது போல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் லேசர் ஒளியின் மூலம் யானை, புலி, காட்டெருமை வரையாடு போன்றவையும் இடம் பெறுகின்றது. கடந்த மூன்று நாட்களில் உதகை தாவரவியல் பூங்காவிற்கு 19,535 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து கண்டு ரசித்துள்ளனர்.